அறிகுறிகளற்ற குழந்தைகளை வைத்தியசாலையில் அனுமதிக்கத் தேவையில்லை!

நோய் அறிகுறிகளற்ற நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் குழந்தைகளை வைத்தியசாலையில் அனுமதிக்கத் தேவையில்லை என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
    
கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளற்ற நிலையில் தொற்று உறுதி செய்யப்படும் குழந்தைகளை வீட்டில் வைத்தே சிகிச்சையளிக்க முடியும் எனவும், 1390 என்கிற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி வீட்டிலிருந்தே சிகிச்சையளிக்க முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.

தொற்றுக்குள்ளாகி காய்ச்சல் இல்லாத, தாய்பால் அருந்தக்கூடிய, உணவுகளை உட்கொள்ளக் கூடிய குழந்தைகளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கத் தேவையில்லை. அதேபோல, தொற்றுக்குள்ளாகி உணவை உட்கொள்ளாத, வாந்தி, கடுமையான காய்ச்சல்போன்ற நோய் அறிகுறிகளை கொண்ட குழந்தைகளை கண்டிப்பாக வைத்தியசாலைகளில் அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை,கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை 51ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!