விலைகள் குறைவாக இருந்த அமைதியான நாட்டை ராஜபக்சவினரிடம் ஒப்படைத்தேன்

பொருட்களின் விலைகள் குறைந்த மட்டத்தில் காணப்பட்ட அமைதியான நாட்டையே தான் தற்போது ஆட்சியில் இருக்கும் ராஜபக்சவினரிடம் கையளித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது சில கடைகளில் பெனடோல் மாத்திரையை கூட பெற்றுக்கொள்ள முடியவில்லை என தனக்கு அறிய கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகள் மாத்திரமல்லாது சமையல் எரிவாயு, பசளை தட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்கள் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் குறித்து தான் மட்டுமல்ல முழு நாடும் வெறுப்படைந்துள்ளதாகவும் மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி விமர்சிக்கும் விதத்திலான அரசாங்கத்தின் ஆட்சியை ஏற்படுத்த பங்களிப்பு செய்தமை சம்பந்தமான கேள்வியும் முன்னாள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, இப்படியான கூட்டணிகள் அமைக்கப்படுவதும் அவை சரிவதும் சஜகமானது என கூறியுள்ளார். அத்துடன் எதிர்காலத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக எதிர்வரும் தேர்தல்களை அடிப்படையாக கொண்டு தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்தை கவிழ்கும் சூழ்ச்சிகள் இன்னும் உருவாகவில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் உள்ள வெற்றிலை சின்னத்தை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மீள் உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த முன்னணியின் ஊடாக எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடும் நோக்கில் அதனை மீள் உருவாக்கம் செய்து வருகின்றனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளராக அமைச்சர் மகிந்த அமரவீர கடமையாற்றி வருகிறார்.