திருடர்களாக மாறிய கோயில் தலைமை குருக்கள்: அதிர்ந்துபோன தமிழகம்!

தமிழகத்தில் கோவிலில் இருந்த தொன்மையான படிச்சட்டத்தை திருடிய 2 குருக்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பரிமள ரங்கநாதர் திருக்கோயில் தோளுக்கினியாள் என்று அழைக்கப்படும் உற்சவ மூர்த்தியை தூக்கிச்செல்ல பயன்படுத்தப்படும் “படிச்சட்டம்” கடந்த 2014ம் ஆண்டு திடீரென காணாமல் போனது.
    
இந்த படிச்சட்டம் வெள்ளி கவசத்தால் ஆனது. இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வந்ததை அறிந்தவர்கள் சுமார் 15 கிலோ எடையிலான புதிய படிச்சட்டத்தை செய்து வந்து மீண்டும் கோவிலில் வைத்துள்ளனர்.

திருடர்கள் எப்படி கோவிலுக்குள் வந்து திருடிச் சென்றனர்? மீண்டும் எப்படி கோவிலுக்குள் படிச்சட்டத்தை வைத்தார்கள்? என பக்தர்களுக்குள் கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து உண்மை தன்மையை அறியவும், குற்றவாளிகள் யார்? என்பதை கண்டறியவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் கேகே நகரை சேர்ந்த ஒருவர் புகார் அளித்திருந்தார்.

2014 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை அதிகாரிகள் மீண்டும் தூசு தட்டி கையில் எடுத்தனர். இந்த நிலையில் தான் அக்கோவிலின் தலைமை குருக்களாக பணிபுரிந்து வரும் ஸ்ரீநிவாச ரெங்க பட்டர் மற்றும் கோவில் குருக்கள் முரளிதர தீட்சிதர் ஆகியோர் மீது சந்தேகம் எழுந்தது.

இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இரண்டு நபர்கள் தான் “தோளுக்கினியாள்” என்ற “படிச்சட்டத்தை” திருடியதும் தெரியவந்தது. பொலிசுக்கு பயந்து அதே போன்று ஒரு “படிச்சட்டத்தை” வாங்கி வைக்க திட்டமிட்டுள்ளனர்.

இதனால் மயிலாடுதுறையில் உள்ள பிரபல நகைக்கடையில் கோவிலுக்கு காணிக்கையாக “படிச்சட்டம்” செலுத்துவதாக கூறி 15 கிலோ எடை கொண்ட வெள்ளி படிச்சட்டத்தை ஆர்டர் கொடுத்து அதை பழையது போல் மாற்றி யாருக்கும் தெரியாமல் கோவிலில் மீண்டும் வைத்தது தெரியவந்தது.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள இருவரும் கோவிலுக்கு தேவையான தொன்மையான பொருட்கள் வாங்க வேண்டுமென பலரிடம் நிதி வாங்கி மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!