சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை

சென்னையில் 6 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய கொலை செய்த வழக்கில், குற்றவாளி தஷ்வந்துக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உச்ச நீதி மன்றம் உறுதி செய்துள்ளது.

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த 6 வயது சிறுமி , கடந்த 2017 பெப்ரவரி மாதம் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ஐடி பொறியாளர் தஷ்வந்த் என்பவர் கைதுசெய்யப்பட்டார். சிறையிலிருந்த அவர் பிணையில் வெளிவந்து தனது தாயை கொலை செய்துவிட்டு மும்பை தப்பி ஓடினார்.

பின்னர், தனிப்படை பொலிஸார் மும்பை சென்று அவரை பிடித்து புழல் சிறையில் அடைத்தனர். சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய வழக்கில் அவருக்கு கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கியது. மேலும், 31 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், குழந்தைகள் பாலியல் தடுப்புச் சட்டத்தின்கீழ் 15 வருட சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.

குறித்த மரண தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் சென்னை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அவரது மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் ராம திலகம் மற்றும் விமலா இன்று தீர்ப்பு வழங்கினர். அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!