72 பேர் இலஞ்ச வழக்குகளில் இருந்து அரசாங்கத்தால் விடுதலை!

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் உட்பட 72 அரச அதிகாரிகள் இலஞ்ச வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.
    
தொழில்நுட்பக் காரணங்களை முன்வைத்து வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான தீர்மானத்தால், அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 72 பேர் நன்மை அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டாலும், கடந்த இரண்டு வருடங்களில் நீதிமன்ற வழக்குகளில் இருந்து தனது கூட்டாளிகளை காப்பாற்றியுள்ளதாகவும் சில இலஞ்ச வழக்குகள் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான தீர்மானம் தொடர்பில், சட்டமா அதிபர் மற்றும் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவிடம், எதிர்க்கட்சி எம்.பிக்கள் குழுவொன்று விளக்கம் கோரியதாகவும் நீதிமன்ற வழக்கு எண்களைத் தவிர வேறு விவரங்கள் தங்களுக்கு வரவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஊழல்வாதிகளை நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுவித்து அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு அரசாங்கம் அனுமதிக்கும் என குடிமக்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!