கேரளாவில் சப்-இன்ஸ்பெக்டரான ஆதிவாசி பெண் – தந்தையின் கனவை நனவாக்கியதாக உருக்கம்

சப்-இன்ஸ்பெக்டர் ஆகவேண்டும் என்பது என் தந்தையின் கனவு எனவும் அதனை நான் நிறைவேற்றிய போது அவர் உயிருடன் இல்லை எனவும் ஆதிவாசி பெண் உருக்கமாக கூறினார்.


கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள மலை கிராமத்தை சேர்ந்தவர் உண்ணி செக்கன்.

உண்ணி செக்கன் பால பிலி, எலிகோ பழங்குடி காலனியில் வசித்து வந்தார். இவரது மகள் சவுமியா. மகள் கேரள போலீஸ் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் சேர வேண்டும் என விரும்பினார். தனது விருப்பத்தை மகளிடமும் கூறிவந்தார்.


இந்த நிலையில் உண்ணி செக்கன் கடந்த ஆண்டு இறந்து போனார். தந்தை இறந்த பின்பு அவரது கனவை நிறைவேற்ற மகள் சவுமியா கடும் முயற்சி மேற்கொண்டார்.


அதன் பயனாக அவர் கேரள போலீஸ் அகாடமியில் சேர்ந்து சிறப்பான பயிற்சி பெற்றார். உரிய பயிற்சிகளை முடித்ததும் அவர் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்றார்.


தற்போது அவர் சப்-இன்ஸ்பெக்டர் சீருடை அணிந்து தனது கிராமத்துக்கு சென்றார். இதுபற்றி சவுமியா கூறும்போது, நான் சப்-இன்ஸ்பெக்டர் ஆகவேண்டும் என்பது என் தந்தையின் கனவு. அதனை நான் நிறைவேற்றிய போது அவர் உயிருடன் இல்லை என்று உருக்கமாக கூறினார். சவுமியாவை அவரது பழங்குடி கிராம மக்கள் பாராட்டினர். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!