மேற்கில் காட்டுத் தீ, கிழக்கில் கனமழை- ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கும் கடுமையான வானிலை

மேற்கு ஆஸ்திரேலியாவின் கிரேட் சதர்ன் பிராந்தியத்தில் காட்டு தீ இன்னும் தீவிரமடையும் என மாநிலத்தின் தீயணைப்பு மற்றும் அவசர சேவை துறை அறிவித்துள்ளது

ஆஸ்திரேலியாவில் நிலவி வரும் கடுமையான வானிலை மாற்றம் காரணமாக காட்டுத் தீயும், மழையும் வெளுத்து வாங்கி வருகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவின் பரந்த நிலப்பரப்பில் உள்ள புதர் நிலங்களில் காட்டுத்தீ  வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில், நாட்டின் கிழக்குப் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் கிரேட் சதர்ன் பிராந்தியத்தில் காட்டு தீ இன்னும் தீவிரமடையும் என மாநிலத்தின் தீயணைப்பு மற்றும் அவசர சேவை துறை அறிவித்துள்ளது. மேலும், சில உள்ளூர் பகுதிகளுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஜனவரியில் ஆறு நாட்களாக தொடர்ந்து 40 டிகிரி செல்சியஸூக்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஜனவரி 13-ம் தேதி அன்று நாட்டின் மிக உயரந்த வெப்பநிலையாக ஒன்ஸ்லோ பகுதியில் 50.7 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. கோடைக்காலத்தில் பொதுவாக வெப்பநிலை அதிகமாக இருந்தாலும் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது, காட்டுத்தீயும் வேகமாக பரவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வானிலை ஆய்வாளர் டாக்டர் மில்டனர் ஸ்பியர் சின்ஹா கூறியதாவது:-

வடமேற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் வெப்பமண்டலத்தினால் கடுமையான வெப்பம் இருந்து வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்தின் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கிழக்கு ஆஸ்திரேலிய கடற்கரையில் ஈரமான காற்றோட்டத்துடன், வளிமண்டல ஈரப்பதமாகவும் உள்ளது.

வடக்கு மற்றும் தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் பெய்த இடியுடன் கூடிய மழை காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையது. புவி வெப்பமடைதல் காரணமாகவும் வெப்பநிலை அதிகரிக்கும்போக்கும் இருக்கலாம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!