சிறிலங்காவில் மீண்டும் மரணதண்டனை – அவசர சட்டவரைவு தயாராகிறது

சிறிலங்காவில் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, அந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா, தகவல் வெளியிடுகையில், ”போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுக்காக ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், சிறைக்குள் இருந்து கொண்டே, பெருமளவில் போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபடுகிறார்கள்.

அண்மைய காலங்களாக, பெருந்தொகையான போதைப் பொருட்கள் சிக்கியுள்ளன. போதைப் பொருள் குற்றங்களால், கொலைகள் இடம்பெற்று வருகின்றன.

இதனைக் கட்டுப்படுத்துவதற்காகவே, போதைப்பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, அந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே போதைப்பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் உள்ளவர்களுக்கும் தண்டனையை நிறைவேற்றவும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது

இதையடுத்து, மீண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட வரைவு ஒன்றை உடனடியாகத் தயாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.

புத்த சாசன அமைச்சர் என்ற வகையில் இந்த விடயத்தில் நான் எந்த முடிவையும் எடுக்க முடியாது.

எனது ஆலோசகர்கள் மகாநாயக்கர்கள், அனுநாயக்கர்கள் மற்றும் மகா சங்கம் தான். அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு அனைத்து மகாசங்கங்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளன” என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!