‘புனிதத்தை காக்க கல்வியை துறக்க தயார்’ – இஸ்லாமிய மாணவிகள் அதிரடி!

கர்நாடகத்தில் 7 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. அப்போது ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ‘புனிதத்தை காக்க கல்வியை துறக்க தயார்’ என கோஷமிட்டனர்.
    
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ. கல்லூரியில் கடந்த 10-ந் தேதி முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து வர கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு, தலைப்பாகை அணிந்து போராட்டம் நடத்தினர்.இதனால் வன்முறை ஏற்பட்டது.

இதையடுத்து பதற்றத்தை குறைக்க மாநில அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவித்தது. இதற்கிடையில் கர்நாடக ஐகோர்ட்டு மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வகுப்பிற்கு வருவதற்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்நிலையில் அரசு உத்தரவுப்படி கடந்த 14-ந் தேதி மாநிலத்தில் உயர்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டது.

அப்போது முஸ்லிம் மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்தனர். இதைப்பார்த்த கல்லூரி தலைமை ஆசிரியர்கள் மற்றும் போலீசார் மாணவிகளிடம் ஹிஜாப்பை கழற்றிவிட்டு வகுப்புக்குள் செல்லும்படி கூறினர். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் அவர்களை வகுப்பில் இருந்து வெளியேற்றியது. இதில் அதிருப்தி அடைந்த பள்ளி மாணவிகள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் 7 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து நேற்று கர்நாடகம் முழுவதும் உள்ள பி.யூ. மற்றும் பட்டதாரி கல்லூரிகள் என அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டது. இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அனைத்து கல்லூரிகள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சித்ரதுர்கா, குந்தாப்புரா, சிவமொக்கா உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கல்லூரிகளுக்கு பல முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் மற்றும் பர்தா அணிந்து நுழைந்தனர். அவர்களை கல்லூரி முதல்வர்கள் தடுத்து நிறுத்தி ஹிஜாப்பை கழற்றும்படி கூறினர். ஆனால் அவர்கள் முடியாது என்றனர். கல்லூரி நிர்வாகமும் ஹிஜாப் அணிந்தால் வகுப்பிற்கு அனுமதி கிடையாது என்று கூறிவிட்டது. இதனால் அதிருப்தியடைந்த முஸ்லிம் மாணவிகள் கல்லூரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-

‘‘மழலையர் பள்ளியில் சேர்ந்து படித்தது முதல் ஹிஜாப் அணிந்து வருகிறோம். இதுவரை எந்த தடையும் இல்லை. கடந்த இரண்டு வாரமாகத்தான் இந்த பிரச்சினை தலைதூக்கியுள்ளது. கல்விக்கு இணையாக ஹிஜாப்பை மதிக்கிறோம். தற்போது கல்வியா? ஹிஜாப்பா? என்றால், ஹிஜாப்தான் முக்கியம் என்றனர். மேலும் ஹிஜாப் ஒரு புனித ஆடை. புனிதத்தை காக்க கல்வியை துறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என்று முழக்கங்கள் எழுப்பினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!