பயங்கரவாத தடுப்புச் சட்டம்: கோட்டாபய வழங்கியுள்ள ஆலோசனை

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை குறுக்கு வழியாக பயன்படுத்தாது, பயங்கரவாதத்துடன் தெளிவான தொடர்புள்ளது என்றால் மாத்திரமே அதனை பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்(G.L.Peiris) குறிப்பிட்டுள்ளார்.

குற்றவியல் வழக்கு ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் இருந்து விலகிக்கொள்வதற்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை குறுக்கு வழியில் பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பொறுப்பற்ற வகையில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என அரசாங்கம் தெளிவாக ஆலோசனை வழங்கியுள்ளது எனக் கூறியுள்ள அமைச்சர் பீரிஸ், “நடக்கின்றதா இல்லையா என்பதை அறிய நாம் சந்தர்ப்பத்தை வழங்கி பார்ப்போம்” குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற பிரதேச சிவில் அமைப்புகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் அமைச்சர் பீரிஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது, பொலிஸ் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துவது சம்பந்தமாக சிவில் அமைப்புகள் மற்றும் அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை முன்வைத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!