கண்ணீரில் வாழ்க்கை போகிறது! நான் வீழ்ந்துவிடமாட்டேன் – மைத்திரி சீற்றம்

பிரச்சினைகள் இல்லாத அழகான நாட்டை தான் தற்போதைய ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்நறுவை மாவட்ட மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடு தற்போது விழுந்துள்ள நிலைமை தொடர்பாக அரசாங்கத்தை குறை கூறுவதால் தீர்வு கிடைக்காது. நாட்டை ஆட்சி செய்பவர்கள், ஆட்சி செய்யாதவர்கள் என அனைவரும் தற்போது ஒரு மேடைக்கு வர வேண்டும். பிரச்சினைகள் இல்லாத அழகான நாட்டை நான் கையளித்தேன்.
மக்கள் உண்டு, குடித்து மகிழ்ச்சியாக இருந்தனர். கமத்தொழிலாளர்கள் சிறப்பான பயிர் செய்தனர். எனது ஆட்சிக்காலத்தில் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை.

எனினும் நாட்டு குடி மக்களின் நாளாந்த வாழ்க்கை இன்றைய நிலைமை போல் இருக்கவில்லை. அரசாங்கத்தை குற்றம் சுமத்துவதால், பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது.

இது நாட்டை ஆட்சி செய்வோர் மற்றும் ஆட்சி செய்யாதோர் ஒன்றாக இணைய வேண்டிய சந்தர்ப்பம். நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒரு மேடைக்குள், ஒரு மேசைக்கு வந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.

கண்ணுக்கு தெரிந்தே வீழ்ந்து வரும் நாட்டை தூக்கி நிறுத்த வேண்டிய நேரம். எம்மீது கல்லெறிந்தாலும் எமக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தி முயற்சித்தாலும் திருடன் எனக் கூறி அவமானம் செய்தாலும் வீழ்ந்து விடப் போவதில்லை.

சுமார் 54 ஆண்டுகளாக கட்சியிலும் அரசியல் வாழ்க்கையிலும் ஈடுபட்டு வருவதால், இந்த அவமானங்கள், அவதூறுகள் பழகி போய்விட்டது. எமது நாட்டில் தற்போது பிரச்சினைகள் அதிகம். கமத்தொழிலாளர்கள் கண்ணீரில் வாழ்க்கையை நடத்துகின்றனர்.

கமத்தொழிலாளர்களின் பிரச்சினை பற்றி நான் கடந்தஒரு வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்தில் பேசி வருகிறேன். என்னை தவிர பொலன்நறுவை மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்ற மேலும் மூன்று பேர் அரசாங்கத்தில் இருக்கின்றனர்.

இவர்களில் எவரும் நாடாளுமன்றத்திலேயோ, வெளியிலேயோ கமத்தொழிலாளர்களின் பிரச்சினை பற்றி பேசியதில்லை. அவர்களின் துன்பங்கள் பற்றி கதைத்ததில்லை. அவர்கள் அனைத்தும் ஆமாம் சார், சரி சார் கோஷம் போடுவதை மாத்திரமே செய்தனர் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!