“புடின் தவறிழைத்துவிட்டார்” – ஜோ பைடன் அதிரடி!

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
    
இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கி வருகின்றன. ஆனால், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை நேரடியாக ரஷியாவை எதிர்த்து இதுவரை சண்டையிடவில்லை.
இந்நிலையில், அமெரிக்கா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜோ பைடன் கூறுகையில், சர்வாதிகாரிகள் அவர்கள் செய்த ஆக்கிரமிப்பு செயலுக்கு விலை கொடுக்காத போது அவர்கள் மேலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர் என்பதை நமது வரலாற்றின் மூலம் நாம் அறிந்துள்ளோம். அவர்கள் தொடர்ந்து முன்னேறி கொண்டே சென்று அமெரிக்கா மற்றும் உலகிற்கு அதிக செலவு, அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடுகின்றனர். புதினின் போர் திட்டமிடப்பட்ட மற்றும் தூண்டப்படாதது. ராஜாங்க ரீதியிலான முயற்சிகளை புதின் நிராகரித்துவிட்டார்.

மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என புதின் நினைத்துவிட்டார். மேலும், அவர் நம்மை நமது வீட்டிலேயே பிரிந்துவிடலாம் என நினைத்துவிட்டார். புதின் தவறாக நினைத்துவிட்டார்… நாங்கள் தயார்’ என்றார்.

‘நாங்கள் தயார்’ என்று பைடன் கூறுவது பொருளாதார ரீதியில் ரஷியா மீது மேலும் தடைகளை விதிப்பதா? அல்லது ரஷியா மீது நேட்டோ ராணுவ நடவடிக்கை எடுக்க உள்ளதா? என்பது குறித்த கேள்வி தற்போது எழுந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!