13 தீர்வு என்றால் 87இலேயே பிரச்சினை தீர்ந்திருக்கும்!

13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றால், 1987 ஆண்டே தமிழர்களுக்கு தீர்வு கிடைத்திருக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
    
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருப்பது. தமிழர்களினுடைய தீர்வின் இலக்கு என்பது வேறு. தமிழர்கள் கௌரவமாக வாழக் கூடிய வகையில் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வந்தால் மட்டும் தான் தமிழர்களுடைய இனப்பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்.
நான் இந்திய தூதுவர்களை சந்தித்த போது கூட 13 அவது திருத்தச் சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்திருந்தேன்.

13 ஆவது திருத்த சட்டத்தில் எந்தவிதமான காணி அதிகாரங்களும் இல்லை. குறிப்பாக வடமாகாணத்தில் மட்டும் 44 வீதமான நிலங்கள் வன இலாகாவிடம் இருக்கிறது.
வன இலாகாவிடம் மாத்திரம் 44 வீதமான நிலங்கள் இருக்கின்ற போதும் மகாவலி, வனஜீவராசி திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் போன்றன தன்னிச்சையாக நிலங்களை வர்த்தகமானியூடாக கையகப்படுத்தும் அதிகாரம் இருக்கும் போது 13 ஆவவது திருத்தச் சட்டம் மூலம் அதனை தடுக்க முடியாது. அதில் காணி அதிகாரம் இல்லை.

எப்படி 13 ஆவது திருத்த சட்டம் தமிழர்களுக்கு தீர்வாக அமையும். 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றால் 1987 ஆண்டே தமிழர்களுக்கு தீர்வு கிடைத்திருக்கும். 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையான தீர்வாக அமையாது என்பது எனது கருத்து எனத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!