மாவட்ட ஆட்சியர் பெயரில் பண மோசடியில் ஈடுபட்ட 10ஆம் வகுப்பு சிறுவன்!

கடந்த அதிமுக ஆட்சியின் போது புதிதாக உருவாக்கப்பட்டது செங்கல்பட்டு மாவட்டம். இந்த மாவட்டத்தின் ஆட்சியர் ராகுல் நாத், கடந்த 8 மாதங்களாக அங்கு பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அரவது ஃபேஸ்புக்கில் இருந்து நண்பர்களிடம் பண உதவி கேட்பது போன்ற மெசேஜ் வந்துள்ளது.
    
இதைப்பார்த்த மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்தின் நண்பர்கள் உடனே இது குறித்து அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் இது குறித்து காவல்துறையிடம் தெரிவித்தார். விரைந்து செயல்பட்ட சைபர் கிரைம் போலீசார் அவரது பெயரில் உள்ள ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது, மர்ம நபர்கள் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலியாக ஃபேஸ்புக் கணக்கு துவங்கி அதில் உள்ளவர்களிடம் பண உதவி கேட்டது அம்பலமானது. இதையடுத்து ip-யைக் கொண்டு எங்கிருந்து இது செயல்படுத்தப்படுகிறது என தீவிர விசாரணையில் இறங்கினர்.

அப்போது, ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள மோசடி நபர்தான் இந்த செயலில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்று விசாரணை செய்தபோது, 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் தான் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி கணக்கு துவங்கி மோசடியில் ஈடுபட முயன்றது தெரிந்தது.

பின்னர் போலீசார் அச்சிறுவனை பிடித்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பிறகு செங்கல்பட்டு அழைத்துவந்தனர். இதையடுத்து சிறுவனைக் கைது செய்த போலீசார் கூர்நோக்கு இல்ல பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பிவைத்தனர். மாவட்ட ஆட்சியரின் பெயரிலேயே போலி கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!