மக்கள் கூடுவதால் கொரோனா பரவும்!

எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான வரிசைகள் உள்ளிட்ட அண்மைக்காலமாக மக்கள் கூடும் பாரிய கூட்டங்கள், கொரோனா தொற்றுக்கள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
    
முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தப்பட வேண்டும் என சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் டொக்டர் ருவன் ஜயசூரிய தெரிவித்தார்.

எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளில் மக்கள் கூடுவதும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயத்தை ஏற்படுத்தும் எனவும் தற்போது கொரோனா தொற்றுகள் குறைந்துள்ள நிலையில், இலங்கையும் உலகமும் இன்னும் வைரஸின் அச்சுறுத்தலைக் கடக்கவில்லை என்றார்.
எனவே, மேலும் கொரோனா வைரஸ் மாறுபாடுகள் வெளிவரக்கூடும் என்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் தெரிவித்தார்.

பொதுமக்கள் தங்கள் காலாவதி திகதிக்கு முன்னதாக தடுப்பூசிகளைப் பெற வேண்டும் என்றும் பல நபர்கள் இன்னும் பூஸ்டர் தடுப்பூசியை பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

அந்நியச் செலாவணி நெருக்கடியின் காரணமாக எதிர்காலத்தில் தேவைப்படும் போது தடுப்பூசி டோஸ்களை இலங்கையால் இறக்குமதி செய்ய முடியாது எனவும் எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதிசெய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!