திருமலை அபிவிருத்தி திட்ட வரைவை சமர்ப்பித்தது சிங்கப்பூர் நிறுவனம்

சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையம், அனைத்துலக துடுப்பாட்ட மைதானம் ஆகியவற்றை உள்ளடக்கிய திருகோணமலை அபிவிருத்தி தொடர்பான திட்டம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது,

திருகோணமலை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை துரிதமாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தை, சிங்கப்பூர் ஆலோசனை நிறுவனமான, சுர்பானா ஜூரோங் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தது.

இதன்படி, “முதல் கட்டமாக, சிறப்பு திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி அதிகாரசபை உருவாக்கப்படும். அது, மாஸ்டர் பிளான் நடைமுறைப்படுத்தல் அலகு என்று அழைக்கப்படும்.

இது பின்னர், திருகோணமலை மெட்ரோ பெருநகர திட்டமிடல், மற்றும் அபிவிருத்தி அதிகாரசபையாக தரமுயர்த்தப்படும்.

இந்தத் திட்டம், ஹிங்குராகொடவில் மூன்றாவது அனைத்துலக விமான நிலையம், புதிய நகர நகர மையம், பலமாடி தரிப்பிட மையங்கள், கேளிக்கைப் பூங்கா, அனைத்துலக துடுப்பாட்ட மைதானம், பல்வேறு நெடுஞ்சாலைகள், சீனக்குடாவில் கொள்கலன் முனையம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, இயற்கை எரிவாயு மின்நிலையம் உள்ளிட்டவற்றை அமைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக, சுர்பானா ஜூரோங் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிலிப் ரென் தெரிவித்துள்ளார்.

2050ஆம் ஆண்டு முழுமையாக நிறைவடையும் வகையில் இந்தத் திட்டம், தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் பங்கேற்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!