மக்களுக்கு அரசாங்கத்தின் மீது முழு நம்பிக்கை:அடுத்த ஐந்தாண்டும் எமக்கே ஆட்சி அதிகாரம்

நாட்டு மக்கள் நாட்டின் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் தொடர்பாக முழுமையாக நம்பிகையுடன் இருப்பதாகவும் இதனால், மேலும் 5 ஆண்டுகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஆட்சி அதிகாரத்தை வழங்க மக்கள் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கண்டி நாவலப்பிட்டி தொகுதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பொதுஜன பெரமுனவிடம் நாட்டின் அதிகாரத்தை மக்கள் வழங்குவார்கள் என்ற முழு நம்பிக்கை இருக்கின்றது. நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் மாத்திரமே உள்ளது.
நெருக்கடிகள் பற்றி எதிர்க்கட்சிகள் எப்படியான கோஷங்களை போட்டாலும் அதற்கான தீர்வுகள் எதிர்க்கட்சிகளிடம் இல்லை.

சஜித் பிரேமதாசவும் அனுர குமார திஸாநாயக்க போன்றவர்கள் தொகை, தொகையாக மக்களை வீதிகளில் இறக்கி ஆர்ப்பாட்டங்களை நடத்தினாலும் நாட்டு மக்கள் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் மீது முழுமையான நம்பிக்கையை கொண்டுள்ளனர்.

மக்கள் வரிசைகளில் அலைந்து திரிந்து படும் கஷ்டங்கள் குறித்து அரசாங்கம் உணர்ந்துள்ளது. மிக விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் தீர்வை வழங்கும் எனவும் மகிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!