தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக சபாநாயகருக்கு உதவியாளராக பெண் நியமனம்!

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை என்ற பாரதியாரின் கனவு இன்றைய காலகட்டத்தில் நனவாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

செய்யும் பணியில் ஆண் பெண் என்ற பேதம் பார்க்காமல், எல்லா வேலைகளையும் பெண்கள் செய்யும் காலம் இது. அதன் தொடர்ச்சியாக, தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக சபாநாயகருக்கு உதவியாளராக பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    
துபாஷ் என்ற பதவி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்று வரை தொடரும் ஒரு பணியாகும். சட்டமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இருந்து சட்டமன்றம் வரை சபாநாயகர் செல்லும் போது முன்னே செல்லும் சபாநாயகரின் உதவியாளர், துபாய் என்று அழைக்கப்படுவார்.

சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியில் காத்திருப்பார் மீண்டும் சபாநாயகர் அவர் அறைக்குச் செல்லும்போது உடன் செல்வார்
1990 ஆம் ஆண்டு சட்டமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன் இந்த பொறுப்பில் ஆண்களே இருந்து வந்த நிலையில் பெண் ஒருவர் இந்த பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரியார் பிறந்த மண்ணின் பெண்களுக்கு சம உரிமை, சமூக நீதி என்ற சொற்களுக்கு உரிய பொருள் கொடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.

துபாஷ் என்ற பொறுப்பிற்கு தனி சீருடையும் உண்டு. ஆண்கள் மட்டுமே அணிந்து இருந்த இந்த சீருடையே, ராஜலட்சுமிக்கும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 60 வயது எட்டியுள்ள ராஜலட்சுமி, இன்னும் இரு மாதங்களில், அதாவது வரும் மே மாதம் ஓய்வு பெற உள்ளார்
தற்போது தமிழக சட்டமன்ற வரலாற்றின் முதல் பெண் துபாஷ் ராஜலட்சுமி, துபாஷ் சீருடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து தொடரும் இந்த பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் துபாஷ் ராஜலட்சுமி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!