மாணவிகளை பள்ளிக்கு செல்ல அனுமதித்த தலீபான்கள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் பெண்கள் கல்வி கற்கும் உரிமைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர்.

இந்த நிலையில் தற்போது ஏழு மாதங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் முழுவதும் இன்று பல்லாயிரக்கணக்கான பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குத் திரும்ப உள்ளனர்.
    
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் பொறுப்பேற்ற போது கொரோனா தொற்று நோய் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன . ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிறுவர்கள் மற்றும் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் மட்டுமே பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இன்று தலைநகர் காபூல் உட்பட பல மாகாணங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று ஆப்கானிஸ்தான் கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.

இது குறித்து அந்த நாட்டின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது :
“சர்வதேச சமூகத்தை மகிழ்ச்சி அடைய செய்வதற்காக நாங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்கவில்லை. எங்கள் மாணவிகளுக்கு கல்வி மற்றும் பிற வசதிகளை வழங்குவதற்காகவே நாங்கள் இதைச் செய்கிறோம்.

12 முதல் 19 வயது வரையிலான பெண்களுக்கான பள்ளிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இஸ்லாமியக் கொள்கைகளின்படி செயல்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!