தமிழர்களை அடையாளம் இல்லாமல் ஒழிப்பதே அரசின் பிரதான நோக்கம்!

இலங்கையில் தமிழர்களை அடையாள ரீதியாக இல்லாமல் ஒழிப்பதே அரசின் பிரதான நோக்கமாக உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
    
“அண்மையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 13 சிங்களவர்கள் நியமிக்கப்பட்டனர். கிளிநொச்சியில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் இல்லை. 3 தமிழ் பேசும் நீதிபதிகளின் தேவை இருக்கின்ற நிலையில் 13 பேரையும் சிங்களவர்களாகவே இந்த அரசு நியமித்துள்ளது இங்குதான் பிழை ஏற்படுகின்றது.
ஒரு சமத்துவம் இல்லாத , ஒரு இனத்தை அடக்கி ஆள்கின்ற ஒவ்வொரு செயற்பாடுகளையும் செய்கின்றபோது அது இலங்கையில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதனை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

தமிழ் மக்களை அடக்கி அதில் குளிர்காய்ந்து ஆட்சியை கொண்டு நடத்த நினைத்தவர்கள் தற்போது அதனுடைய பலாபலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஆட்சியாளர்களின் கொள்கையில்தான் முதலாவது பிழை இருக்கின்றது.

1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தின் பின்னர் இலங்கைக்குள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாகவும் வரக்கூடிய சூழ்நிலைகள் இல்லாததன் காரணமாகவும் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தமிழர் பிரச்சினைக்கான தீர்வு காணாமை மிக முக்கிய பங்காக அமைகின்றது.

இன்று புலம்பெயர் நாடுகளிலுள்ள ஈழத்தமிழர்கள் அங்கு மிகவும் பலமான நிலையில் இருக்கின்றார்கள். அவர்களை இங்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் அரசு சிந்திக்க வேண்டும் ஏனெனில், தற்போதைய சூழலில் வெளிநாட்டிலிருந்து 10 இலட்சத்துக்கு மேற்பட்ட பணம் அனுப்பப்பட்டால் அது ஏன் அனுப்பப்படுகின்றது என வங்கிகளினால் மேலதிக விபரங்கள் கேட்கப்படுகின்றன.

இதனால் வங்கிகள் மூலம் பணம் அனுப்ப புலம்பெயர் தமிழர்கள் அச்சப்படுகின்றார்கள் இவ்வாறான விடயங்களும் டொலர் பற்றாக் குறைக்கு ஒரு காரணம். அரச வங்கிகளில் ஒரு விலையும் தனியார் வங்கிகளில் இன்னொரு விலையும் உண்டியல்கள் மூலம் பெறும் டொலருக்கு வேறு விலையுமாக மூன்று விதமாக டொலரின் விலை நிர்ணயிக்கப்படுகின்றது.

இதனை விட தமிழ் இனத்தை அழிப்பதே அரசின் தொடர்ச்சியான கொள்கை. இலங்கையில் தமிழர்களை அடையாள ரீதியாக இல்லாமல் ஒழிப்பதே அரசின் பிரதான நோக்கமாக உள்ளது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!