இலங்கையின் எரிசக்தி துறையை தனது நேரடியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இந்தியா! அம்பலப்படுத்திய சம்பிக்க

வரையறுக்கப்பட்ட இலங்கை பெட்ரோலிய சட்டத்திற்கு அமைய இந்திய எண்ணெய் நிறுவனம்(IOC)விரும்பியவாறு எரிபொருள் விலைகளை அதிகரிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் எரிசக்தி அமைச்சரான அவர், குறித்த சட்டத்திற்கு அமைய நிதியமைச்சர் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆகியோரின் அனுமதியின்றி இந்திய எண்ணெய் நிறுவனம் விலைகளை அதிகரிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என இந்திய எண்ணெய் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுவது பச்சை பொய். கட்டுப்பாடு இன்றி இவ்விதமாக எரிபொருள் விலைகளை அதிகரிக்க இடமளித்தால், வரிசைகளில் நின்றும் கூட மக்களுக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை உருவாகும்.

இந்தியாவுக்கு மிக குறைவான மானிய விலையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கிடைக்கின்றது.

எனினும் இலங்கை ரூபாவுக்கு நிகராக அமெரிக்க டொலரின் விலை அதிகரித்துள்ளதாக கூறி, இந்திய எண்ணெய் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விற்பனையின் மூலம் பெரும் இலாபத்தை ஈட்டி வருகிறது எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் இந்தியா, இலங்கையின் எரிசக்தி துறையை தனது நேரடியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் இதன் காரணமாகவே இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

விலை அதிகரிப்புக்கான உத்தரவுகள் இந்தியாவில் இருந்து நேரடியாக பிறப்பிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!