தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கம்!

கொரோனா வைரஸ் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி தமிழகத்தில் கால் பதித்தது. இதையடுத்து தொடர்ந்து அதிகரித்த தொற்று 3 அலைகளாக பரவியது. முதல் அலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் அதிகபட்சமாக 6,997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி ஒரே நாளில் கொரோனாவுக்கு 127 பேர் பலியாகினர்.
    
இதையடுத்து 2-வது அலையில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதத்தில் ஒரே நாளில் 36 ஆயிரத்து 184 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து எழுந்த 3-வது அலையில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்றது.

தமிழகத்தில் தடுப்பூசி
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதையடுத்து இணை நோய் உள்ளவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

முதலில் மந்தமாக இருந்த தடுப்பூசி போடும் பணி 2-வது அலைக்கு பின்னர் சூடுபிடிக்க தொடங்கியது. தொடர்ந்து முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு உரிய நாட்களுக்கு பின்னர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 92 சதவீதம் பேர் முதல் தவணையும், 75 சதவீதம் பேர் 2-வது தவணையும் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

தடுப்பூசி கட்டாயம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. இதையடுத்து தடுப்பூசி போடும் பணி தொடங்கிய சில நாட்களில் பெரும் தொழிற்சாலைகள், தியேட்டர்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்டவைகளில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பணியில் இருக்க வேண்டும் என அரசு அறிவித்தது.

மேலும் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு அலுவலகங்களுக்கு வரும் ஊழியர்கள், தியேட்டர்களுக்கு வரும் பொதுமக்கள் என அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அரசு அறிவித்தது. மேலும் பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
குறைந்தது கொரோனா
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 50-க்கும் குறைவானவர்களுக்கே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. சில மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிக்கொள்ளப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கட்டுப்பாடுகள் நீக்கம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதையடுத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ள அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அனைத்து மாவட்ட துணை பொது சுகாதார இயக்குனர்களும், பெருநகர சென்னை மாநகராட்சியின் மாநகர நல அதிகாரியும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளான சமூக இடைவெளி கடைபிடித்தல், முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல் உள்ளிட்டவைகளை தொடர்ந்து கடைபிடிக்க ஊக்குவிக்க வேண்டும்.

இதைப்போல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் தமிழகத்தில் முதல், 2-வது தவணை மற்றும் பூஸ்டர் ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி போட தகுதியானவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முக கவசம்
இந்த நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் முக கவசம் அணிவது தொடர்ந்து கட்டாயம் என டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே வரவேண்டும் என்கிற உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளது. முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் நீக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து முக கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!