பதவி விலக தயார்! தேரர் ஒருவரிடம் பிரதமர் மகிந்த வழங்கிய வாக்குறுதி

பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரது பெயரை பரிந்துரை செய்தால் தான் பதவி விலக தயார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.  

ஜனாதிபதியின் அதிகாரத்திற்கமைய நாட்டின் அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஊடகங்களிடம் அவர்  தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

பதவி விலகுகிறேன், பதவி விலக தயாராகவுள்ளேன் எவ்வித பிரச்சினையும் கிடையாது. இருப்பினும் பதவி விலகியதை தொடர்ந்து பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிக்க தாமதம் ஏற்படுமாயின் நாட்டில் அரச நிர்வாகம் இல்லாமல் போகும்.இடைவெளியை நிரப்புவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும். அக்காலப்பகுதியில் நாடு முழுமையாக அழிவு நிலைக்கு செல்லும் என பிரதமர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வசமுள்ள நிறைவேற்று அதிகாரத்திற்கமைய நாட்டின் அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என பிரதமரிடம் குறிப்பிட்டோம்.

ஜனாதிபதியின் அதிகாரத்திற்கமைய நாட்டை முன்னெடுத்து செல்ல முடியாது.பிரதமர் உட்பட அரசாங்கம் பதவி விலகினால் நாடு ஸ்தீரத்தன்மையை இழக்கும்.

நாடு ஸ்தீரத்தன்மையை இழந்தால் தற்போதைய நிலைமை பாரதூரமான விளைவுகளுக்கு கொண்டு செல்லும் என பிரதமர் தொடர்ந்து குறிப்பிட்டார்.

நான் பதவி விலக தயார் ,சந்தேகம் கொள்ள வேண்டாம்.நாடாளுமன்றில் உள்ள சகல கட்சிகளையும் ஒன்றினைத்து முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நகர்வு குறித்து ஆராயுங்கள் என பிரதமர் தெரிவித்தார் என்று ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!