பேரறிவாளனை ஏன் விடுவிக்கக் கூடாது? – உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி!

பேரறிவாளனை ஏன் விடுவிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் இந்திய பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழுவால் பேரறிவாளன் கடந்த 1991 ஜூன் 11-இல் கைது செய்யப்பட்டாா். கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்ட பேரறிவாளன், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
    
இதற்கிடையே, சிறப்பு நீதிமன்றத்தினால் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை கடந்த 2014 பிப்ரவரி 14-ஆம் திகதி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டுக்குப் பின்னா், அவ்வப்போது பரோலில் வெளிவந்த பேரறிவாளன், கடந்த 9 மாதங்களாக பரோலில் ஜோலாா்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்து வந்தாா்.

இதனிடையே, பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 9-ஆம் திகதி உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவு சிறை அதிகாரிகளுக்கு கிடைக்காததால் பேரறிவாளன் பரோலில் தொடா்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவு, புழல் சிறைத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்ததை அடுத்து பேரறிவாளன் ஜோலாா்பேட்டையில் இருந்து செவ்வாய்க்கிழமை புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டாா்.

பல்வேறு சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்ட பின்னா் பேரறிவாளன் பிணையில் விடுவிக்கப்பட்டாா். இந்நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் பேரறிவாளன் தரப்பில் ‘விடுதலை அளிக்கக்கோரி அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்பும் ஆளுநர் எந்தவிதமான முடிவையும் எடுக்காமல் உள்ளார்’ என வாதிட்டப்பட்டது.

இதனை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் ‘யார் விடுதலை செய்ய வேண்டும் என்கிற குழப்பம் நீடிப்பதால் பேரறிவாளனை ஏன் நீதிமன்றமே விடுவிக்கக் கூடாது? பேரறிவாளனை விடுவிப்பதே ஒரே தீர்வு’ என மத்திய அரசு தரப்பிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆளுநர் அல்லது குடியரசு தலைவர் அதிகாரம் குறித்த விஷயங்களுக்குள் போகாமல் நாங்கள் ஏன் பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட கூடாது என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அவரை விடுவிப்பது மட்டும் தான் இந்த வழக்கை முடித்து வைப்பதற்கான ஒரே தீர்வு என நாங்கள் நினைக்கிறோம். அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவிற்கு எதிராகவும் ஒரு மாநில ஆளுநர் செல்வார் என்றால் அது கூட்டாட்சி கட்டமைப்பின் மீது மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!