இந்திய கல்வித் துறையை மிரட்டும் சைபர் அட்டாக்!

இந்தியாவின் கல்வித் துறையும், ஆன்லைன் கல்வியையும் சீர்குலைக்கும் வகையில், இணையதள தாக்குதல் நடப்பதற்கான அபாயம் அதிகமாகி இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த 3 மாதங்களில் இந்த தாக்குதல் 20 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
    
இது தொடர்பாக, ‘உலக கல்வித்துறைக்கு இணையதள அச்சுறுத்தல்,’ என்ற தலைப்பில் வெளியான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தோனேசியா, பிரேசில் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, இணையதள தாக்குதல்களின் அடுத்த மிகப்பெரிய இலக்காக, இந்திய கல்வி நிறுவனங்களும், ஆன்லைன் கல்வி தளங்களும் உள்ளன. கடந்த கல்வியாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு கல்வியாண்டின் முதல் 3 மாதங்களில் உலகக் கல்வி துறை மீதான இணைய அச்சுறுத்தல்கள் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் கடந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்ட இணைய அச்சுறுத்தல்களில் 58 சதவீதம், இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களை குறி வைத்து நடத்தப்பட்டுள்ளது. இதில் பைஜூஸ், ஐஐஎம் கோழிக்கோடு, தமிழ்நாடு தொழிற்கல்வி இயக்குனரகம் ஆகியவையும் அடங்கும். இதற்கு அடுத்த இடத்தில் 10 சதவீத இணையதள தாக்குதல் அச்சுறுத்தலுக்கு இந்தோனேசியா இலக்காகி உள்ளது.

வளரும் நாடுகளில் அதிகரித்து வரும் கல்வி தொழில்நுட்ப சந்தை, மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் ஊடுருவல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த இணையதள தாக்குதல் நடத்தப்படுகிறது. எனவே, இணையதள தாக்குதல் குற்றவாளிகள் கல்வித்துறையில் உள்ள நிறுவனங்களை நோக்கி படையெடுப்பதில் ஆச்சரியமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!