புலம்பெயர் தேசத்தில் உள்ள உறவுகள் இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும்: சுமந்திரன் கோரிக்கை

இலங்கையில் உள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ள எமது உறவுகள் இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்கப் போவதாக தமிழக முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டிருந்தார். நாங்கள் அதனை வரவேற்கின்றோம். ஆனால் பொருளாதார நெருக்கடியினால் அனைத்து மக்களும் பாதிக்கப்படுகின்றார்கள்.

எனவே அனைவருக்கும் அந்த உதவிகளை வழங்கினால் நல்லதாக இருக்கும் என நாங்கள் எமது கருத்தினை தெரிவித்திருந்தோம், அதனை செவிமடுத்து இலங்கையில் உள்ள அனைவருக்கும் உதவி வழங்குவதற்கு தமிழக அரசு முன்வந்துள்ளது.

அது ஒரு நல்ல விடயம், அதேபோல புலம்பெயர்ந்துள்ள எமது உறவுகளும் அவ்வாறான ஒரு வேலைத்திட்டத்தினை தற்போது நாட்டிலுள்ள நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு செயற்பட்டால் நல்லதாக இருக்கும். எனவே புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு நான் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன். நீங்களும் எமது உறவுகளுக்கு உதவிகளை வழங்கினால் நல்லதாக அமையும். 

நாட்டில் தற்பொழுது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை காணப்படுகின்றது. பிரதமரை மாற்ற வேண்டும் என்று ஒரு குழு விடாப்பிடியாக நிற்கின்றார்கள். எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளது.

தற்போதைய பிரதமர் பதவி விலகினால் புதியவர் பிரதமராக வருவார். அவருடன் ஒரு புதிய அமைச்சரவை உருவாகும். அந்த அமைச்சரவையை உருவாக்குவதற்கு ஐவர் கொண்ட குழுவினை உருவாக்கியுள்ளார்கள். அந்த ஐவர் கொண்ட குழுவில் உள்ளோரில் எமக்கு திருப்தியில்லை.இவ்வாறான நிலையில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருவதன் மூலம் நாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஜனாதிபதி நாட்டின் தலைவர். அவர் அவ்வாறே இருப்பார்.

அதேபோல பிரதமர் பதவி விலகினால் இன்னொரு பிரதமர் வருவார். அவருடன் இணைந்து புதிய அமைச்சரவை உருவாகும். இவ்வாறு உருவாகும் அமைச்சரவை தற்போதுள்ள அமைச்சரவையை விட மிகவும் கொடூரமான அமைச்சரவையாக இருக்குமாக இருந்தால் எவ்வாறு இருக்கும் என ஆழமாக பார்க்கவேண்டும். எனவே நாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி முறையினை ஒழிப்பதன் மூலமே நாட்டில் ஏதாவது மாற்றம் ஏற்படும்.

இந்த நாட்டில் யார் பிரதமர் பதவிக்கு வந்தாலும் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை. அத்தோடு நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கூட்டமைப்பு எதிராக வாக்களிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். எனினும் அந்த விடயம் தொடர்பில் நாங்கள் அனைத்து கட்சிகளுடனும் ஆராய்ந்து முதல்கட்டமாக ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளோம்.

நான் ஒன்றை கேட்க விரும்புகின்றேன் 30 வருட காலமாக இடம்பெற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் தான் இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுத உதவியை வழங்கி இருந்தார்கள்.

ஆனால் நாங்கள் அவர்களுடன் தானே சந்திப்புக்களை மேற்கொண்டு நமக்கு தீர்வுகளைப் பெற்றுத் தருமாறு கூறுகின்றோம். அவ்வாறான நிலையில் காலிமுகத்திடலில் ஈடுபடும் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு தமது ஆதரவினை வழங்க கூடாது என கேள்வி கேட்க விரும்புகின்றேன்.

இங்கே ஒரு சிலர் கேட்கிறார்கள் நாம் போராட்டத்தை மேற்கொண்ட போது எமக்கு ஆதரவளிக்காதவர்களுக்கு நாங்கள் ஏன் ஆதரவளிக்க வேண்டுமென. அவ்வாறு இருக்க முடியாது எமக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நாங்கள் பயன்படுத்த வேண்டும்.

எமது போராட்டம் இடம்பெற்றபோது தென்னிலங்கையைச் சேர்ந்த சிலர் எமக்கு ஆதரவாக பேசி இருந்தார்கள் அவர்களில் சிலரின் பெயரைக்கூட குறிப்பிட முடியும்.

அவ்வாறான நிலையில் தற்போது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது எனவே தமிழராகிய நாம் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!