இரண்டாவது முறையாக தைவான் வான்பரப்பில் ஊடுருவிய சீன போர் விமானங்கள்!

இந்த ஆண்டில் மட்டும் இரண்டாவது முறையாக 18 போர் விமானங்களை அனுப்பி தைவான் வான் பரப்பை சீனா ஊடுருவிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் அதிர்ச்சியடைந்த தைவானின் வெளியுறவு அமைச்சகம் தங்களது விமானத்தை அணுப்பி எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
    
எப்போது வேண்டுமானாலும் சீனாவால் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற நெருக்கடியில் உள்ளது தைவான். மேலும், தங்கள் நாட்டின் ஒருபகுதியை தேவையெனில் வலுக்கட்டாயமாக அபகரிக்கவும் சீனா தயங்காது என்றே அங்குள்ள மக்களால் அஞ்சப்படுகிறது.

2021ம் ஆண்டின் கடைசி காலாண்டில் மட்டும் சீனாவின் அத்துமீறலுக்கு தைவன் பலமுறை இலக்கானது. மேலும், அக்டோபர் 4ம் திகதி, ஒரே நாளில் 56 போர் விமானங்களை தைவானின் வான் பரப்பில் ஊடுரவைத்து சீனா அச்சுறுத்தலில் ஈடுபட்டது.

தற்போது இந்த ஆண்டு இரண்டாவது முறையாக 18 போர் விமானங்களை அனுப்பி சீனா அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து, தைவானின் வெளிவிவகார அமைச்சகம் குறித்த ஊடுருவல் தொடர்பில் புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.

இது இந்த ஆண்டில் மட்டும் இரண்டாவது முறை எனவும், கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 39 போர் விமானங்களை அனுப்பி தைவான் மக்களை சீனா அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
2021 அக்டோபர் மாதம் மட்டும் 196 முறை சீனா விமானங்கள் தைவான் மீது ஊடுருவியுள்ளது. மட்டுமின்றி நான்கு நாட்களில் மட்டும் 149 முறை சீனா போர் விமானங்களை அனுப்பி ஊடுருவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவானின் வடகிழக்கில் ஜப்பானின் தெற்கு ஒகினாவா தீவுகளுக்கு இடையே ஒரு விமானம் தாங்கிக் கப்பல் உட்பட எட்டு சீன கடற்படைக் கப்பல்கள் கடந்து சென்றதாக ஜப்பான் இந்த வாரம் தெரிவித்ததை அடுத்து இந்த ஊடுருவல் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!