பணம் அச்சிடப்படாவிட்டால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும்! ரணில் எச்சரிக்கை

பணத்தை அச்சிடவில்லை என்றால் அரச ஊழியர்களுக்கு ஊதியத்தை செலுத்த முடியாமல் போகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பீ.பீ.சி சிங்கள சேவைக்கு நேற்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
பணத்தை அச்சிடுவது எனது கொள்கை இல்லை என்றாலும் பணத்தை அச்சிட நேரிடும். பணத்தை அச்சிடவில்லை என்றால், அரச ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க முடியாது.

மிக உக்கிரமான பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்நோக்கி வருகின்றோம். ஆங்கிலேயர்கள் மற்றும் ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களில் கூட இவ்வாறான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்காது என நான் நினைக்கின்றேன்.

இந்த ஆண்டே எமக்கு மிகவும் கடினமான ஆண்டு. அந்நிய செலாவணி இல்லை. அரசாங்கத்திற்கு வருமானம் கிடையாது. அந்நிய செலாவணியுடன் வர்த்தகங்கள் நடக்கவில்லை என்றால், வருமானம் குறையும்.

ரூபாய் மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அந்நிய செலாவணியுடன் வர்த்தகம் செய்யவில்லை என்றால், வரியை செலுத்த முடியாது. வரி குறைக்கப்பட்டுள்ளது. தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

அந்நிய செலாவணி நெருக்கடியால், ரூபாய் கிடைக்கும் வருமானமும் கிடைப்பதில்லை. தற்போதைய நிலைமையில் சுமார் மூன்று பில்லியன் டொலர்கள் வரை தேவைப்படுகிறது.
இதனை பெற்றுக்கொள்வதே எமக்கு இருக்கும் முதலாவது சவால். அதனை பெற்றுக்கொள்ளவே நான் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.

நாட்டில் வரிசைகளை இல்லாமல் செய்ய வேண்டும். சாதாரண இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த வேண்டும். மக்கள் மூன்று வேளையும் சாப்பிட வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

நடுத்தர வகுப்பு மக்களை முன்னேற்ற வேண்டும். உழைக்கும் மக்களின் வீடுகளுக்கு சிறந்த பொருளாதாரத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களை கொள்வனவு வரிசையில் நிற்கும் யுகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

1977 ஆம் ஆண்டு நாங்கள் இப்படியான வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். திறந்த பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தினோம். மின்சாரம் இன்றி 2001 ஆம் ஆண்டு எமக்கு இருண்ட யுகமாக இருந்தது.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. அவற்றையும் நான் முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை முன்நோக்கி இட்டுச் சென்றேன். 2015 ஆம் ஆண்டும் நாம் பெரும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டது. பொருளாதார வீழ்ச்சியை தடுக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக செய்தோம்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னரும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பினோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம்.
நான் பிரதமராக பதவியேற்ற காலங்களில் மூன்று வேளையும் மக்களுக்கு சாப்பிடும் வசதியை ஏற்படுத்திக்கொடுத்தேன். சிறப்பாக வாழ வழியை உருவாக்கினேன்.


தொழில் வாய்ப்புகளை உருவாக்கினேன். தற்போது இந்த சவாலை ஏற்று மக்களுக்கு சிறந்த வாழ்க்கை ஏற்படுத்திக்கொடுக்க நான் எதிர்பார்த்துள்ளேன்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டாலும் இவற்றை செய்ய முடியும். இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சிலும் 1939 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நான்கு உறுப்பினர்களே இருந்தனர். எனினும் பிரதமராக பதவியேற்று போரையும் வென்றார் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!