கைதானார் நவாஸ் ஷெரீஃப்

ஊழல் வழக்கில் குற்றவாளிகள் என நிரூபனமாகி தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோரை பொலிஸார் நேற்று கைது செய்தனர்

பாகிஸ்தானில் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தினால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவர் பிரதமர் பதவியையும் இழந்தார்.

அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக நவாஸ் ஷெரீஃப் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தில் ‘அவென்பீல்ட்’ வழக்கு தொடரப்பட்டது.

இநத வழக்கில், நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என அந்த நீதிமன்றம் முடிவு செய்தது.

அதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீஃப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டும் சிறை தண்டனை விதித்து கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நவாஸ் ஷெரீஃப், மகள் மரியம் நவாசுடன் நேற்று இரவு பாகிஸ்தான் திரும்புவதாக தகவல்கள் வெளியாகின.

லண்டனில் இருந்து அபுதாபி சென்ற நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் அங்கிருந்து விமானம் மூலம் பாகிஸ்தான் புறப்பட்டு வந்துகொண்டிருப்பதாக தெரியவந்தது.

இந்நிலையில் இன்று மாலை 6.15 மணியளவில் அபுதாபியில் இருந்து நவாஸ் ஷெரீஃப் வரும் விமானம் லாகூர் வந்தடையும் என முன்னர் தகவல் வெளியானது. ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்கு விமானம் வராததால் நவாஸ் ஷெரீஃபை வரவேற்க காத்திருந்த தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று இரவு சுமார் 9.15 மணியளவில் நவாஸ் ஷெரீஃப் வந்த விமானம் லாகூர் விமான நிலையத்தில் வந்தடைந்தது. விமானத்தில் இருந்து இறங்கி வந்த நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் ஷெரீஃப் ஆகியோரை கைது செய்த அதிகாரிகள் பாதுகாப்பு படையினர் சூழ, சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.\

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!