மூன்று நாட்களுக்கு பெட்ரோல் இல்லை! வரிசையில் நிற்கவேண்டாம் -நாடாளுமன்றில் அரசாங்கம் கோரிக்கை

நாட்டில் டீசல் விநியோகத்தில் பிரச்சினைகள் இல்லை. எனினும் பெட்ரோல் விநியோகத்தில் பிரச்சினை உள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் மூன்று நாட்களில் பெட்ரோல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரையறைக்கு உட்பட்ட கையிருப்புகளே இருப்பதால், பொதுமக்கள் வரிசையில் நிற்கவேண்டாம் என்று அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

எதிர்வரும் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை அளவிலேயே பெற்றோல் விநியோகம் வழமைக்கு திரும்பும் என்று காஞ்சன விஜயசேகர குறிப்பிட்டார்.

பெற்றோல் விநியோகத்துக்காக வந்துள்ள கப்பலுக்கு டொலர் செலுத்தப்படாமையே இதற்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

எனவே நோயாளர் அவசர வாகனங்கள் உட்பட்ட அத்தியாவசிய விடயங்களுக்கு மாத்திரமே பெட்ரோலை நிரப்பக்கூடிய நிலை உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

டீசல் கையிருப்பை பொறுத்தவரை இன்று மாலைக்குள் நாட்டில் உள்ள 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் தொகை அனுப்பப்பட்டு விடும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை கப்பல்கள் வந்துள்ள போதும் கடல் கொந்தளிப்பு காரணமாக துறைமுகத்தில் அவற்றை இறக்கமுடியாமையால், லிட்ரோ எரிவாயுவின் விநியோகமும் இன்று நடைபெறாது என்பதால் பொதுமக்கள் வரிசையில் நிற்கவேண்டாம் என்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!