ஊடகவியலாளர்கள் தொடர்பில் சபாநாயகரின் தீர்மானம்! சஜித் கடும் ஆட்சேபம்!

ஊடகவிலாளர்கள் இருவரின் கைத்தொலைபேசிகளை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள், பறிமுதல் செய்தமை தொடர்பில், சபாநாயகர் இன்று தமது தீர்மானத்தை வெளியிட்டுள்ளார்.

இதன்போது விசாரணைகளின் அடிப்படையில், குறித்த ஊடகவியலாளர்கள்,நாடாளுமன்ற நியதிக்கு புறம்பாக செயற்பட்டுள்ளார்கள் என்று சபாநாயகர் அறிவித்தார்.

கடந்த செவ்வாய்கிழமையன்று பொதுஜன பெரமுனவின் குழுக் கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில் அதனை கைத்தொலைபேசியின் மூலம் காணொளிப்படுத்தினர் என்று குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு ஊடகவியலாளர்களின் கைத்தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு வந்த நிலையில், இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று சபாநாயகர் அறிவித்திருந்தார்.
இதன்படியே இன்று சபாநாயகர், தமது தீர்மானத்தை அறிவித்தார்.

இந்த தீர்மானத்தின்படி, நாடாளுமன்றின் வைத்திய மத்திய நிலையத்தில் இருந்து நுாலகம் வரையிலான பிரதேசத்தில் மாத்திரமே ஊடகவியலாளர்களால் காணொளிப்படம் எடுத்தல் மற்றும் குரல் பதிவுகளை மேற்கொள்ளமுடியும்.

குழுக்கூட்டங்கள், நடைபெறும் இடங்களில், ஊடகவியலாளர்களால் குரல் பதிவுகளை செய்யமுடியாது என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

எனினும் சபாநாயகரின் இந்த தீர்மானத்தை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, கடுமையாக விமர்சித்தார்.

குழுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் இருந்து தாம் உட்பட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகங்களுக்கு கருத்துக்களை வழங்கியுள்ளமையை சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ஊடகவியலாளர்களின் கருவிகளை பறிமுதல் செய்வதற்கு நாட்டின் ஜனாதிபதிக்கு கூட அதிகாரம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!