கொழும்பில் வீதித் தடைகளை அகற்ற கோரும் மனு விசாரணைக்கு ஏற்பு!

கொழும்பு நகரில் உள்ள நிரந்தர வீதித் தடைகளை அகற்ற பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூன் 22ஆம் திகதி பரிசீலிக்க உச்சநீதிமன்றம் தீர்மானித்தது.
    
இந்த மனுக்கள், நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்குறிப்பிட்ட தீர்மானம் எடுக்கப்பட்டது.

கம்பஹாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஷெனால் ஜயசேகர மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ரஞ்சித் சிசிர குமார ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபர், கோட்டை மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டி கோட்டைப் பகுதி மற்றும் அலரி மாளிகைக்கு அருகாமையில் பொலிஸாரால் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர வீதித் தடைகளினால் பொதுமக்களின் நடமாடும் சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!