முகநூல் காதலனை கரம்பிடிக்க இளம்பெண் செய்த துணிகர செயல்!

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு இளம்பெண் ஒருவர் தண்ணீரில் நீந்தி வந்து தனது காதலனை கரம் பிடித்துள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் கிருஷ்ணா மந்தல் (22). இவருக்கும் இந்தியாவைச் சேர்ந்த அபிக் மந்தலுக்கும் பேஸ்புக் மூலமாக நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது.
    
இதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால், கிருஷ்ணா மந்தலிடம் இந்தியா வருவதற்காக பாஸ்போர்ட் இல்லை. ஆனாலும் தனது காதலனைத் திருமணம் செய்து கொள்வதற்காக கிருஷ்ணா எடுத்த முடிவு யாரும் யோசிக்க முடியாதது.

அபிக்கை மணப்பதற்காக சட்டவிரோதமாக எல்லை தாண்ட முடிவு செய்த அவர், சுந்தரவனக்காட்டை முதலில் வந்தடைந்தார். அங்கிருந்த நதியில் ஒரு மணிநேரம் நீந்தி தொடர்ந்து தனது இலக்கை அடைந்தார்.

இந்தியா வந்த அவர் மூன்று நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோயிலில் வைத்து தனது காதலனை மணமுடித்துக் கொண்டார்.

இந்தநிலையில், சட்டவிரோதமாக எல்லையை கடந்ததற்காக கிருஷ்ணா மந்தலி திங்கள்கிழமை பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் வங்கதேசத்தின் உயர் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!