இலங்கையில் உணவுக்காக கலவரங்கள் வெடிக்கும் சூழல் உருவாகும்! மனோ கணேசன் எச்சரிக்கை

உணவுக்காக இலங்கையில் இன்னமும் பெரிதாக கலவரம் ஏற்படவில்லை. ஆனால், அதற்கான சூழல் விரைவாக ஏற்பட்டு வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

பெட்ரோல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்றவற்றுக்காக மக்கள் மோதிக்கொள்ளத் தொடங்கி விட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலவரங்கள் ஆரம்பித்து விட்டன
வரிசைகளில் நான் முந்தி, நீ முந்தி என்றும், பெட்ரோல் தீர்ந்துவிட்டால், பெட்ரோல் நிலைய ஊழியர்களைத் தாக்குவது என்றும், பெட்ரோல் கொண்டுவரும் லொறிகளை நிறுத்தி குழப்பம் விளைவிப்பது என்றும், சமையல் வாயு கலன்களை கொண்டுவரும் லொறியை நிறுத்தி, கலன்களை அடாத்தாக தூக்கிச் செல்வது என்றும் கலவரங்கள் ஏற்பட ஆரம்பித்துவிட்டன.

பெட்ரோல் ஒழுங்காக தரவில்லை என்று சொல்லி பெட்ரோல் நிலைய உரிமையாளர் ஒருவரின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொலிஸார் மோதல் பரவலாக ஏற்படுகிறது. முதல் மோதலில் பொலிஸ் சுட்டதில் ஒருவர் இறந்தார். பலர் காயமடைந்தனர். இதனால் பொலிஸ் மீது கடும் விமர்சனம் எழுந்தது.

பொலிஸாரின் அசாத்திய பொறுமை
பொதுவாக உலகில் நல்ல பெயர் இல்லாத ஸ்ரீலங்கா பொலிஸாரும், இராணுவத்தினரும் இப்போது அசாத்திய பொறுமை காக்கின்றனர். இப்படியே போனால் மக்கள், கடைகளை, வர்த்தக அங்காடிகளை உடைப்பது போன்ற நிலைமைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. அப்போது ஸ்ரீலங்கா பொலிஸ், இராணுவம் பொறுமை காக்குமா அல்லது சுடுமா அல்லது மக்களுடன் சேர்ந்து புரட்சி செய்யுமா என்று பல ஊகங்கள் நாட்டுக்குள்ளே உலவத் தொடங்கிவிட்டன என குறிப்பிட்டுள்ளார்.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!