எதிர்ப்புகளை மீறி சொன்னதை செய்துகாட்டிய இளம்பெண்!

இந்தியாவில் முதல் முறையாக குஜராத் பெண் எதிர்ப்புகளை மீறி தன்னை தானே திருமணம் செய்துகொண்டார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த 24 வயது பெண் ஷாமா பிந்து, ‘சோலோகாமி’ எனும் தன்னை தானே மணந்துகொள்ளும் திருமணத்தை செய்துகொள்வதாக அறிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள இந்த நடைமுறை, இந்தியாவில் சட்டப்படி அங்கீகரிக்கப்படவில்லை. எனினும், ஜூன் 11ஆம் திகதி தன்னை தானே திருமணம் செய்வதாக ஷாமா பிந்து அறிவித்தார். ஆனால் அவரது முடிவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
    
இந்து மதத்திற்கு இது எதிரானது என்றும், கோவிலில் இந்த திருமணத்தை நடத்தை அனுமதிக்க மாட்டோம் என்றும் பாஜகவின் நகர துணை தலைவர் சுனிதா சுக்லா கூறினார். அதன் பின்னர், யாருடைய மதத்தையும், நம்பிக்கையையும் புண்படுத்த விரும்பவில்லை என்று கூறிய பிந்து, திருமண இடத்தை மாற்ற விரும்புவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் திடீரென அறிவித்த திகதிக்கு முன்பே, தனது வீட்டில் ஷாமா பிந்து தன்னை தானே திருமணம் செய்துகொண்டார். அவரது இந்த திருமணத்தில் மெஹந்தி, மஞ்சள் பூசும் விழா உட்பட அனைத்து பாரம்பரிய வழக்கங்களும் பின்பற்றப்பட்டது. பின்னர் தனது நெற்றியில் தானே குங்குமம் வைத்து பிந்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் குறித்து ஷாமா பிந்து கூறுகையில், ‘இறுதியாக திருமணமான பெண்ணாக உணர்கிறேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. சோலோகாமி திருமணம் செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அறிவித்த திகதியில் விழா நடத்தினால் பிரச்சனைகள் ஏற்படலாம் என நினைத்தேன்.
இதனால் 3 நாட்களுக்கு முன்பே தோழிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டேன்

. சோலோகாமி திருமணத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஏராளமானவர்கள் எனது உணர்வை புரிந்து வாழ்த்துகள் தெரிவித்தனர். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார். இந்த விழாவில் பிந்துவின் நெருங்கிய தோழிகள் மற்றும் அவருடன் பணியாற்றும் நபர்கள் என 10 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!