ரணில் பாரம்பரியத்தையும், சுமந்திரன் ஒழுங்கையும் மீறினரா ..! தீர்ப்பு வழங்கப்போகும் சபாநாயகர்!

ரணிலும் சுமந்திரனும்
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அனுதாப பிரேரணை தொடர்பான அமர்வில் நாடாளுமன்ற ஒழுங்குகள் தொடர்பான சில விடயங்கள் வெளிப்பட்டன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீ்ர்த்தி அத்துகோரளயின் அனுதாப பிரேரணையின்போது, நாடாளுமன்றில் சாணக்கியனை வன்முறைகளுக்கு ஆதரவானவர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதற்கு காரணம், கடந்த மே 20ஆம் திகதியன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, 20ஆவது திருத்தம் மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் என்பவற்றுக்கு ஆதரவளித்தமையே ஆளும் கட்சியினரின் வீடுகள் கடந்த மே மாதம் 9ஆம் திகதி எரிக்கப்பட்டமைக்கான காரணம் என்று சாணக்கியன் கூறியதாகவும், ஆகவே அவர் வன்முறைகளை அல்லது அமரகீர்த்தி அத்துகோரளயின் கொலை ஆகியவற்றை ஏற்றுக்கொள்கிறாரா என்று ரணில் கேள்வி எழுப்பினார்.

சாணக்கியனுக்கு சார்பாக சுமந்திரன்
எனினும் சாணக்கியனின் இந்த கருத்தை ரணில் விக்கிரமசிங்க விமர்சனம் செய்யமுடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒரு அனுதாப உரை நிகழ்த்தப்படும்போது, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக பிரதமரான ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்து, அவரின் நாடாளுமன்ற பாரம்பரியம் தொடர்பில் கேள்வியை எழுப்பியுள்ளது.

அனுதாப உரை ஒன்றின்போது, வேறு விடயங்களை பேசக்கூடாது என்பது நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், ரணில் அதனை மீறியுள்ளார் என்று சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாரம்பரியம் தெரியாத ரணி்ல்
எனவேதான், ரணில், சாணக்கியனை பற்றி, சபையில் விமர்சனம் வெளியிடும்போது, தாம் நாடாளுமன்ற பாரம்பரியத்தை கருத்தி்ற்கொண்டு அவையில் எதிர்ப்பை காட்டவில்லை என்று அவர் கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மீண்டும் நாடாளுமன்ற அவைக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, சுமந்திரன், கட்சி தலைவர்களின் கூட்டத்தில் வைத்து கூறிய கருத்துக்கள் ஏற்புடையதல்ல என்று முறையிட்டார். அவர் தமது எதிர்ப்பை நாடாளுமன்ற அவையில் கூறியிருக்கவேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.

இது தொடர்பில் சபாநாயகர் விசாரணை நடத்தவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்தநிலையில் ரணில் விக்கிரமசிங்க, தமது கருத்துக்களை வெளியிட்ட பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமகீர்த்தி தென்னகோன் தமது கருத்தை வெளியிட்டிருந்தார் சில்லு மாறிச்சுற்றும்போது சாணக்கியன் கொழும்புக்கு வரமுடியாமல் போகும் என்றும் அப்படி நடக்கக்கூடாது என்று பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

சபாநாயகரின் பொறுப்பு 
எனவே ரணில் நாடாளுமன்ற பாரம்பரியத்தை கடைப்பிடிக்கவில்லையா?  சுமந்திரன் கூற்றில் ஒழுங்குப்பிரச்சினை இருக்கின்றதா? என்பதை சபாநாயகரின் தீர்ப்பு வரும்போதே தெரிந்துக்கொள்ளமுடியும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!