சுடுகாட்டில் எரிந்துகொண்டிருந்த இளம்பெண்ணின் சிதையின் மீது பாய்ந்து தனது உயிரை விட்ட வாலிபர்!

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர், சுடுகாட்டில் எரியும் பெண்ணின் சிதையில் குதித்து உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவத்தில் உள்ள மஜ்கவான் கிராமத்தில் ஜோதி தாகா என்ற பெண் உயிரிழந்துள்ளார். அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படும் நிலையில், அவரது உடல் சுடுகாட்டில் வைத்து எரியூட்டப்பட்டது.

ஜோதியின் சடலம் எரிந்து கொண்டிருந்தபோது உறவினர்கள் வீடுகளுக்கு திரும்பினர். ஆனால் கரன் (21) என்ற இளைஞர் மட்டும் சுடுகாட்டில் எரிந்துகொண்டிருந்த சிதை முன்பு சென்றுள்ளார். ஜோதியின் உறவினரான கரன், சிதை முன்பு விழுந்து வணங்கியதை சிலர் பார்த்துள்ளனர்.

அப்போது திடீரென அவர் எரிந்துகொண்டிருந்த சிதைக்குள் அடியெடுத்து வைத்து தனது உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிலர், கரனை வெளியே இழுத்தனர்.

அதனைத் தொடர்ந்து, இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்கள் பலத்த தீக்காயம் அடைந்த கரனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாதி வழியிலேயே கரனின் உயிர் பிரிந்தது.

இதனால் சோகத்தில் மூழ்கிய உறவினர்கள், ஜோதி தாகா எரியூட்டப்பட்ட இடத்திற்கு அருகிலேயே கரன் உடலை தகனம் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பஹேரியா பொலிஸார், கரனின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!