ரணிலையும் அழைத்துக்கொண்டு ஜனாதிபதி வீட்டுக்கு செல்ல வேண்டும்

ஒவ்வொருவரிடம் பந்தை கைமாற்றாது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொறுப்பை ஏற்று பதவியில் இருந்து விலக வேண்டும் என வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரகோன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்களின் நம்பிக்கை சிதைத்த ஜனாதிபதி

நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப கடும் அர்ப்பணிப்புகளை செய்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சி உருவாக்கப்பட்டது. மிக குறுகிய காலத்தில் அந்த கட்சியை சூழ பெரும் எண்ணிக்கையிலான மக்கள் திரண்டனர்.

அந்த கட்சி 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றது. இதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாட்டை கட்டியெழுப்புவார் என்ற கடும் நம்பிக்கையில் கோட்டாபய ராஜபக்சவை மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்தனர்.

எனினும் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் நாளுக்கு நாள் மக்களின் நம்பிக்கையை சிதைக்க ஆரம்பித்தார்.இதுவே தற்போதைய குழப்பமான நிலைமைகளுக்கு ஆரம்பம்.

தமது பெற்றோரை போன்று நேசித்த கட்சியை விட்டே அனைவரும் பொதுஜன பெரமுவுக்கு பின்னால் திரண்டனர். பெரிய நம்பிக்கையை வைத்தே அவ்வாறு இணைத்தனர்.

69 லட்சம் வாக்குகள் கோட்டாபய ராஜபக்சவுக்கு கிடைத்ததாக சிலர் கூறுகின்றனர். இல்லை, உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது இவர்கள் எவரும் இருக்கவில்லை. பதவிகளை அர்ப்பணிப்பு செய்தவர்கள் காரணமாகவே வெற்றி கிடைத்தது.

நாளுக்கு நாள் அரசாங்கத்தின் மீது இருந்த நம்பிக்கை குறைய ஆரம்பித்ததன் காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்தனர்.

நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றவரின் தூரநோக்கற்ற செயற்பாடுகள் காரணமாக தற்போது நாட்டில் பொருளாதார, அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளது என்பது இரகசியமான விடயமல்ல.
போராட்டகாரர்கள் கூறுவது உண்மை

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கி, அது தான் எடுத்த சிறந்த முடிவு என ஜனாதிபதி நினைப்பார் என்றால், அதுவும் விவசாயிகளுக்கு உரத்தை வழங்காது நாட்டுக்கு ஏற்பட்ட அழிவை போன்றதாகவே இருக்கும்.

தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் வலுவிழந்து விட்டன. போராட்டகாரர்களுக்கு கூறுவது தவறு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தோம். போராட்டகாரர்கள் கூறுவது சரி என்பது தற்போது எமக்கு புரிகிறது.

நாட்டு மக்கள் மகிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து போகுமாறு கூறிய பின்னர், ரணில் விக்ரமசிங்கவை நியமித்தது, நாட்டு மக்களுக்கு ஆலோசனை வழங்க அல்ல. வீழ்ந்து போயுள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது.

எனினும் அவர் வேறு வேலைகளை செய்து வருகிறார். இதனால், ஜனாதிபதி பிரதமரையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு செல்ல வேண்டும் எனவும் எஸ்.எம்.ரஞ்சித் சமரகோன் மேலும் தெரிவித்துள்ளார். 

எஸ்.எம்.ரஞ்சித், முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!