நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் – மகிந்த ராஜபக்ச

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி நாடாளுமன்றத்தை பலப்படுத்தும் யோசனை 21வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதற்கு ஆதரவளிக்கும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது கட்சி உறுப்பினர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே மகிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

21வது திருத்தம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதியாக இருப்பதாகவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை பலப்படுத்தும் திருத்தத்தை ஆதரிப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு பிரச்சினை இல்லை, எனினும், நிறைவேற்று அதிகாரம் அதிகாரமற்ற பிரதமரின் கைகளுக்கு செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்


பிரதமர் பதவியிலிருந்து விலகிய மகிந்த ராஜபக்ச
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறியதை தொடர்ந்து பிரதமர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டம் வெடித்தது.

இந்நிலையில், ஜனாதிபதி செயலகம் அலரி மாளிகை என்பன பொது மக்களினால் முற்றுகையிட்டப்பட்டு மிகவும் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 9ம் திகதி அரச ஆதரவாளர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.

இதில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்த வன்முறை வெடிப்பதற்கு முன்னர் மே 9ம் திகதி அன்று பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச இராஜினாமா செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.    


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!