மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கையால் உச்சகட்ட கோபத்தில் கிம்!

கிம் ஜோங் அணு ஆயுதத்தை பயன்படுத்தக் கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் வடகொரியா அருகே மேற்கத்திய நாடுகள் போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான துருப்புக்களை களமிறக்க முடிவு செய்துள்ளது.

ஹவாய் அருகே முக்கிய போர் பயிற்சியை முன்னெடுக்க இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    
எதிர்வரும் 29ம் திகதி முதல் ஆகஸ்டு 4ம் திகதி வரையில் அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உட்பட 26 நாடுகள் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதில், 38 போர் கப்பல்கள், நான்கு நீர்மூழ்கி கப்பல்கள், 170 போர் விமானங்கள் மற்றும் 25,000 துருப்புகள் களமிறங்க உள்ளன.

உலகின் மிகப்பெரிய சர்வதேச கடல் பயிற்சி என அடையாளப்படுத்தியுள்ள குறித்த முகாமில், தென் கொரியா மற்றும் ஜப்பான் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

இந்த நிலையிலேயே, மேற்கத்திய நாடுகள் ஒன்றிணைந்து கொரிய தீபகற்பத்தை சீர்குலைத்து இராணுவ மோதலின் அபாயத்தை அதிகரிக்க செய்வதாக வடகொரியா சாடியுள்ளது.
அமெரிக்காவின் இந்த போக்கால், கொரியா தீபகற்பம் இராணுவ மோதல்களின் தொடர்ச்சியான ஆபத்தில் சிக்கியுள்ளது என வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், அமைதியை சீர்குலைத்த உண்மையான குற்றவாளி யார் என்பதை உலகம் உணர்ந்து, அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது.

இதனிடையே, தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை விடுப்பது போன்று, முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு இதுவரையில் அதிக ஏவுகணை சோதனைகளை கிம் ஜோங் உன் நிர்வாகம் முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!