தாய்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட்ட 1000 கம்போடியர்கள்

தாய்லாந்தில் சட்டவிரோதமாக வேலை செய்துவந்த 1000த்திற்கும் மேற்பட்ட கம்போடியர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். வெளிநாட்டுத் தொழிலாளர்களை பதிவு செய்வதற்கு தாய்லாந்து அரசு நீட்டித்த காலக்கெடு கடந்த ஜூன் 30 யுடன் முடிந்ததை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது நாடுகடத்தப்பட்ட 1000த்திற்கும் மேற்பட்ட கம்போடிய தொழிலாளர்கள் ஜூலை 1 முதல் ஜூலை 9 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்கள். இந்த தொழிலாளர்கள் மீண்டும் சட்டவிரோதமாக வேலை செய்து சிக்கினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தாய்லாந்து தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து தொழிலாளர் அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கம்போடிய தொழிலாளர்கள் தாய்லாந்தில் வேலை செய்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தொழிற்சாலைகள், கட்டுமானத்துறை, மீன்பிடி மற்றும் விவசாயத்துறையில் உடல் உழைப்பு தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தொழிலாளர் நலச் செயற்பாட்டாளரான பாவ் சினா, “இடம்பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான தாய்லாந்தின் எச்சரிக்கை குறித்து கவலை கொள்கிறோம். இடப்பெயர்வை குறைப்பதற்கு கம்போடிய எல்லைப்பகுதிகளில் முறையான வேலை வாய்ப்பை கம்போடிய அதிகாரிகள் உருவாக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, தாய்லாந்தில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் சட்டத்தினைக் கடந்த 2017 ஜூன் மாதம் தாய்லாந்து ராணுவ அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டு வந்தது. பதிவுச் செய்யாத தொழிலாளர்களை பதிவுச்செய்வதற்கான பணிகள் நடைபெற்ற வந்தபோது, அச்சத்தின் காரணமாக பல வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தாய்லாந்தை விட்டு வெளியேறி வந்தனர். இதனால், வேலைக்கு போதுமான ஆட்களின்றி ஒரு நெருக்கடியான சூழல் உருவானது.

அதுமட்டுமின்றி இத்தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருந்த தனியார் நிறுவனங்களிடமிருந்து எழுந்த அழுத்தத்தினாலும் இச்சட்டத்தினை அமல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டு வந்தது. நீண்ட காலத்தாமதம் மற்றும் காலக்கெடு நீட்டிப்பிற்கு பின் சட்டவிரோதமாக பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தாய்லாந்து அரசு மேற்கொண்டு வருகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!