தடையாக உள்ள விதிமுறைகளை உடன் தளர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவு

தொழில் வளர்ச்சி மற்றும் முதலீடுகளுக்கு தடையாக உள்ள விதிமுறைகளை உடன் தளர்த்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு கோட்டையில் ஜனாதிபதி மாளிகையில் கைத்தொழில் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இடம்பெற்றிருந்தது.

ஜனாதிபதியின் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் வைத்து கலந்துரையாடும் போதே ஜனாதிபதி அந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டும்

மேலும் தெரிவிக்கையில், அந்நியச் செலாவணியை விரைவாக ஈட்டுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கைத்தொழில் துறையில் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

முதலீட்டை ஊக்குவிப்பதற்காக புதிய உத்திகளைக் கையாண்டு கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கு பாரியளவு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.


அந்நியச் செலாவணியை ஈட்டக்கூடிய கைத்தொழில்களை இனங்கண்டு அவற்றின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

அத்துடன் ஏற்றுமதி கைத்தொழில் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணியை நேரடியாக மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

பல வெளிநாட்டு முதலீட்டாளர்களை இழந்துள்ள நாடு
இதேவேளை இரத்தினக்கல் கைத்தொழில் துறையின் மூலம் பெறக்கூடிய அந்நியச் செலாவணியின் அளவு மிக அதிகமாக இருந்தாலும், தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் காரணமாக இலங்கைக்கு இரத்தினக்கற்களுக்கு உரிய இலாபம் கிடைப்பதில்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.


அத்துடன் புதிய கைத்தொழில்களை உருவாக்கும்போதும் ஏற்கனவே உள்ள கைத்தொழில்களை தொடர்ந்து நடத்திச் செல்லும் போதும் பல்வேறு அரச நிறுவனங்களின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அவற்றை பலமிழக்கச் செய்வதாக கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜெனரல் தயா ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பல வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாடு இழந்துள்ளதாகவும், நீண்டகாலமாக இருக்கின்ற விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் முதலீட்டிற்கு கடுமையான தடையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!