வடக்கின் அபிவிருத்திக்கு வடக்கு மக்களே தடையாக இருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளமை சரியானதுதானா என்பது கண்டறியப்பட வேண்டும்.
வடக்குடன் தொடர்பில்லாத மலையகத்தைச் சேர்ந்த அரசியல்வாதியொருவர், வடக்குத் தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்கள் புறமொதுக்கக் கூடியவையல்ல. அது மட்டுமல்லாது கல்வி இராஜாங்க அமைச்சர், வடபகுதி மக்கள் மீது கரிசனை கொண்டவர் என்பதை மறுத்துரைக்க முடியாது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவராக இருந்த அமரர் பெ. சந்திரசேகரன், தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரித்த ஒருவர் என்பதை நாம் மறந்துவிட முடியாது.
அதே கட்சியைச் சேர்ந்தவர் தான் இந்தக் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
போர் காரணமாக வட பகுதி மூன்று தசாப்தகாலமாக பெரும் அபிவிருத்தியையே காணவில்லை
போர் இடம்பெற்றதன் காரணமாக சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக வடக்கில் அபிவிருத்திப் பணிகள் எதுவும் இடம்பெறவில்லை. சகல கட்டமைப்புக் களும் அழிவடைந்தன.
மருத்துவ மனைகளும், பாடசாலைகளும் கூடத் தாக்குதல்களுக்கு உள்ளாகி அழிவைச் சந்தித்தன. இந்த நிலையில் அபிவிருத்திக்கான தேவைகள் தற்போது இங்கு அதிகமாக உள்ளன.
வடக்கைப் பொறுத்தவரையில் மாகாணசபை ஒன்று இயங்கிக் கொண்டிருக்கின்றது. மத்திய அரசுடன் நல்லுறவை பேணிவருகின்ற கூட்டமைப்பின் ஆட்சிதான் வடக்கு மாகாணசபையில் இடம்பெற்று வருகின்றது.
இதனால் மத்திய அரசு கூட்டமைப்புடன் இணைந்து வடக்கின் அபிவிருத்தி வேலைகளைத் தடையின்றி மேற்கொள்ளமுடியும்.
வடபகுதி இளைஞர்கள் வேலைவாய்ப்புக்களின்றி அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இங்குள்ள இளைஞர்கள் தவறான வழியில் செல்வதற்கு இதுவுமொரு பிரதான காரணமாகும். படித்த இளைஞர்கள் அனைவருக்கும் அரச வேலைவாய்ப்புக் கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது.
இதனால் தனியார் துறைகளையே அவர்கள் நாடவேண்டியிருக்கும். ஆனால் தெற்கைப் போன்று வடபகுதியில் பொருளாதார மேம்பாட்டில் தனியார் துறையின் பங்களிப்பு பெருமளவில் இல்லையென்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
நீண்ட காலமாக இடம்பெற்ற போர் காரணமாகத் தனியார் துறையினர் வடக்கில் முதலீடு செய்து தொழில்களை ஆரம்பிக்க விரும்பவில்லை.
வட பகுதியில் முதலீடுகளை மேற்கொள்ள முதலீட்டாளர்கள் தயக்கம்
தற்போது போர் ஓய்ந்துவிட்ட போதிலும், நாட்டில் மீண்டும் போர் இடம்பெறாதென்பதை அவர்கள் முற்றுமுழுதாக நம்பவில்லை. இதன் காரணமாக அவர்கள் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ளத் தயக் கம் காட்டி வருகின்றனர்.
இது ஒரு புறமிருக்க, வடக்கில் முன்னர் இயங்கிய காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் ஆகியவற்றில் ஏராளமான வடபகுதி மக்கள் தொழில்வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.
இதனால் பொருளாதார ரீதியில் பல குடும்பங்கள் தன்னிறைவு பெற்று வாழ்ந்தன. இன்று அவை மீளவும் இயங்காமையால் தொழில்வாய்ப்பும் இழக்கப்பட்டுவிட்டது.
ஒட்டுசுட்டான் ஒட்டுத் தொழிற்சாலையில் தொழில் வாய்ப்பைப் பெற்றவர்களும் அதை இழந்த நிலையில் காணப்படுகின்றனர். வடபகுதி மக்கள் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து தமக்குத் தேவையான ஓடுகளை வரவழைக்க வேண்டிய நிலை இன்று காணப்படுகின்றது.
இவற்றைவிட சிறிய தொழில்களை ஆரம்பிப்பதன் மூலமாகவும் பலருக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தர முடியும். மாகாண அரசு, மத்திய அரசின் ஆலோசனைகளை மற்றும் நிதியுதவியைப் பெற்று இவற்றை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.
உலகில் சகல துறைகளிலும் முன்னணி நாடாக விளங்கும் அமெரிக்கா, தொழில் துறைக்கு ஈடாக விவசாயத் துறைக்கும் முக்கியத் துவம் வழங்கி வருகின்றது.
இதனால் முக்கியமான உணவுப் பொருள்களில் அந்த நாடு தன்னிறைவு பெற்றுள்ளதுடன் வௌி நாடுகளுக்கான ஏற்றுமதியிலும் ஈடுபட்டு வருகின்றது.
அமெரிக்கன் மாவென ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட கோதுமை மாவு, அமெரிக்க நாட்டிலிருந்து உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக் கது.
நாடொன்றின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காளர்கள் நாட்டின் பொதுமக்களே
ஒரு நாடு அல்லது பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சி அங்கு வாழுகின்ற மக்களின் முழு ஒத்துழைப்புடன் ஏற்படுத்தப்பட வேண்டும். வடபகுதியில் விவசாய நடவடிக்கைகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.
வேறு பணிகளில் உள்ளவர்கள் கூட விவசாயத்துறையில் ஈடுபடுவதைக் காண முடிகின்றது. குடாநாட்டில் நீர்ப் பாசனத் திட்டங்கள் இல்லாததால் நிலத்தடி நீரை நம்பியே மேட்டு நிலவிவசாயம் மேற்கொள்ளப்படுவதைக் காண முடிகின்றது.
நீர்ப்பாசனத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமாக, குடாநாட்டு விவசாயிகளின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, அவர்களது பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்யமுடியும்.
அது மட்டுமல்லாது வடபகுதி விவசாயிகள் தமது உற்பத்திப் பொருள்களை நியாயமான விலைக்கு விற்க முடியாது அவலப்படுகின்றனர். இடைத் தரகர்களும், வியாபாரிகளும் அவர்களைத் தலைதூக்க விடுவதில்லை.
இந்த அவல நிலை நீக்கப்பட வேண்டும். வட பகுதியிலேயே விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களை நியாயமான விலையில் விற்பனை செய்யக்கூடிய வசதியை உரிய தரப்பினர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
குடாநாட்டின் சில பிரதான வீதிகள் சீர் செய்யப்படாத நிலையில் காணப்படுவதால், மக்கள் போக்குவரத்துச் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர். இந்தக் குறைபாடு உடனடியாக நிவர்த்தி செய்யப்படல் வேண்டும்.
ஒரு பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தியை ஆட்சியாளர்களே ஏற்படுத்த வேண்டும். அபிவிருத்தியை விரும்பாத மக்கள் வட பகுதியில் உள்ளதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கடும் உழைப்பாளிகளான வட பகுதி மக்கள், வாய்ப்புக்கள் கிட்டுமானால் நாட்டின் பொருளாதார அபி விருத்திக்கு முக்கிய பங்காற்ற ஒரு போதும் பின்நிற்க மாட்டார்கள். – Source: uthayan