உயிர் காக்கும் மருந்துகளின் கையிருப்பு தீர்ந்தது!

அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் கையிருப்பு தீர்ந்துள்ள நிலையிலேயே வைத்தியசாலைகள் இயங்கி வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் எச்சரித்துள்ளது.
    
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சங்கத்தின் உறுப்பினர் மருத்துவர் பிரசாத் கொலம்பகே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

தற்போது சில அரச வைத்தியசாலைகளில் குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவ மருந்துகள் மட்டுமே உள்ளதாகவும் ஏனையவற்றின் கையிருப்பு வேகமாக தீர்ந்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர், இந்த பிரச்சினையை பல தனிநபர்களும் அமைப்புகளும் பல சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் சுட்டிக்காட்டியிருந்ததாக குறிப்பிட்டார்.

இவ்விடயம் குறித்து நிபுணர்கள் கவலைப்படும் நிலையில், அரச வைத்தியசாலைகளுக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் தம்மிடம் இருப்பதாக சுகாதார அமைச்சர் கூறியதாக டொக்டர் கொலம்பகே தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் கூறியது உண்மையாக இருந்தால், தற்போது விநியோக பிரச்சினை இருப்பதாக தாம் நம்புவதாக தெரிவித்த டொக்டர் கொலம்பகே, நாடு முழுவதும் உள்ள அந்தந்த வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்து தொகுதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வது சுகாதார அமைச்சரின் பொறுப்பாகும் என்றார்.

தேசிய கண் வைத்தியசாலையில் ஒரேயொரு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து மட்டுமே இருப்பதாகவும், வேறு மாற்று மருந்துகளை வழங்க முடியாத நிலையில் ஊழியர்கள் இருப்பதாகவும் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

கையிருப்பு குறைவாக உள்ள அல்லது வேகமாக தீர்ந்துகொண்டிருக்கும் மருந்துகளின் பட்டியல் தங்களிடம் இருப்பதாகவும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!