இலங்கையில் கலப்பு தேர்தல் முறைக்கு நாடாளுமன்ற செயற்குழு பரிந்துரை!

தேர்தல் பரிந்துரைகள் 
இலங்கையின் தேர்தல்களில் கலப்பு முறையை நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற செயற்குழு, இந்த பரிந்துரையை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கும் இடம்
உள்ளுாராட்சி, மாகாண மற்றும் பொதுத்தேர்தல்களில் பெண்களுக்கான வாய்ப்புக்களை அதிகரிப்பது மாத்திரமன்றி, இளைஞர்களின் அதிக பிரசன்னத்தையும் உறுதிப்படுத்தும் பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.

தோ்தல் செலவுகளை கட்டுப்படுத்துவது மற்றும் தேர்தல் பிரசாரங்களின் செலவுகளை கட்டுப்படுத்தும் பரிந்துரைகளும் செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் மோசடிகளை தடுக்கமுடியும் என்று நம்பப்படுகிறது. அரச சொத்துக்கள் பயன்படுத்துவதை தடுக்கும் சட்டங்களை கொண்டு வருவதற்கான பரிந்துரைகளும் செய்யப்பட்டுள்ளன.

நவீன முறைகள்
தேர்தல் வாக்களிப்பு முறையை விரைவுப்படுத்தல் மற்றும் தேர்தல் முடிவுகளை விரைவில் அறிவித்தல் செயற்பாடுகளுக்காக நவீன முறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் முறையை இலகுப்படுத்தும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தேர்தல்களில் போட்டியிடுவதற்கு சிரேஸ்ட அரச சேவையாளர்களுக்கு இருக்கும் தடைகளை நீக்கும் பரிந்துரையையும் நாடாளுமன்ற செயற்குழு மேற்கொண்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!