நித்தியானந்தா ஆசிரமத்தில் மாயமான இளம்பெண்: போலீஸார் தீவிர சோதனை!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் (தாய், தந்தை, 2 மகள்கள்), நித்தியானந்தா நடத்தி வரும் பிடதி ஆசிரமத்தில் சேவை செய்துள்ளனர். பின்னர், மூத்த மகளை மட்டும் அழைத்து கொண்டு ஆசிரமத்தில் இருந்து பெற்றோர் வெளியேறினர்.

20 வயதுள்ள இளையமகள், நித்தியானந்தா பக்தர்களில் ஒருவராக ஆசிரமத்தில் தங்கியுள்ளார். அவரை பார்க்க பெற்றோர் செல்லும்போது, ஆசிரமத்தில் உள்ளவர்கள் தடுத்துள்ளனர். இதனால் கர்நாடக போலீஸார் துணையுடன் பிடதி ஆசிரமத்தில் தேடி பார்த்தபோது 20 வயது மகளை காணவில்லை.
    
மகள் குறித்த தகவல் ஏதும் கிடைக்காமல் விரக்தியில் இருந்த பெற்றோருக்கு, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமத்தில் இளைய மகள் தங்கி இருக்கலாம் என தகவல்கிடைத்துள்ளது. இதையடுத்து, கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமத்தில், இளைய மகள் குறித்து பெற்றோர் விசாரித்தபோது, உரிய பதில் கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக, அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில், கிராமிய போலீஸார் நேற்று முன்தினம் இரவு தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தேடியும், ஆசிரமத்தில் இளம்பெண் இல்லை என தெரியவந்தது. மேலும், அவர் குறித்த விவரங்களும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை. இதனால், இளம்பெண்ணின் பெற்றோர் கர்நாடகாவுக்கு திரும்பிச் சென்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!