அரபு நாடுகளிடம் உதவி கேட்க வெட்கமில்லையா?

கோத்தாபய ராஜபக்ஷ் அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படுத்திய அநியாயங்கள் வேறு எந்த அரசாங்கத்தினாலும் ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அரபு நாடுகளுக்கு சென்று உதவி கேட்பதற்கு அரசாங்கம் வெட்கப்படவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைவர் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
    
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய கொழும்பு காரியாலயத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. பணம் இருந்தாலும் மக்களுக்கு பெற்றுக்கொள்வதற்கு அத்தியாவசிய பொருட்கள் இல்லை. சிறிமா அம்மையாரின் காலத்திலும் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு வரிசையில் இருந்தார்கள். ஆனால் அன்று மக்களுக்கு தேவையான பொருட்கள் இருந்தன. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதில் இந்த அரசாங்கத்தை தவிர எந்த அரசாங்கமும் தோல்வியடைந்ததில்லை.
அத்துடன் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வுகாண்பது என அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருக்கின்றது.

பல நாடுகளிடமும் எரிபொருள் உதவிகளை கேட்டபோதும் இந்த அரசாங்கத்துக்கு உதவி செய்ய யாரும் தயார் இல்லை. இறுதியாக தற்போது அரபு நாடுகளின் உதவியை அரசாங்கம் கோரி வருகின்றது. அரபு நாடுகளிடம் எரிபொருள் உதவி கோருவதற்கு அரசாங்கம் வெட்கப்படவேண்டும். அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆரம்பத்தில் இருந்தே முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய அநீதிகளை மேற்கொண்டு வந்திருக்கின்றது.

குறிப்பாக கொவிட் தொற்றில் மரணிக்கும் முஸ்லிம் ஜனாசாக்களை எரிக்காமல் அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு அரபு நாடுகள் கூட்டாக ஜனாதிபதியிடம் கோரி இருந்தது. ஆனால் ஜனாதிபதி அவர்களின் கோரிக்கையை நிராகரிக்கும் வகையில் எந்த பதிலையும் அவர்களுக்கு வழங்கவில்லை.

இந்நிலையில் அரசாங்கம் தற்போது எரிபொருள் பிரச்சினைக்கு உதவுமாறு அரபு நாடுகளை கேட்டு வருகின்றது. நாடு தற்போது எதிர்கொண்டுள்ள எரிபொருள் பிரச்சினைக்கு அரபு நாடுகள் உதவி செய்யவேண்டும் என்பதே எமது கோரிக்கை.

ஆனாலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பார்த்து எந்த நாடும் எமக்கு உதவப்போவதில்லை. மாறாக இலங்கை மக்களுக்காக அவர்கள் உதவி செய்யும் என்றே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
மேலும் ஜனாதிபதியின் தான்தோன்றித்தனமான, எதேச்சாதிகாரமான தீர்மானம் காரணமாகவே நாட்டில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணமாகும். விவசாயம் தொடர்பான அறிவு, அனுபவம் உள்ளவர்களிடம் எந்த ஆலாேசனையும் கேட்காமல் இரசாயண உரத்தை தடை செய்தார்.

20ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு வழங்கிய அதிகாரங்களே அவர் இவ்வாறு தன்னிச்சையாக தீர்மானங்களை எடுப்பதற்கு காரணமாகும். அதனால் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த அனைவரும் ஜனாதிபதியின் முட்டாள் தனமான தீர்மானங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டும்.
எனவே மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி தனது பதவியை துறக்கவேண்டும். இன்னும் 2வருடங்கள் கோத்தாய ராஜபக்ஷ் அதிகாரத்தில் இருந்தால் எமது நாடு சோமாலியாவைவிட மோசமான நிலைக்கு சென்றுவிடும் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!