ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்

நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான திணைக்கத்தின் ஆசிய- பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் மாரி யமாஷிடா சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

ஐ.நாவின் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான ஆதரவுப் பணியகத்திலும் பணியாற்றும் இவர், சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள், அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயவே, இங்கு வந்துள்ளார்.

இந்தப் பயணத்தின் ஒரு கட்டமாக அவர், சிறிலங்கா அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

நேற்று சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்குச் சென்ற மாரி யமாஷிடா, சிறிலங்கா இராணுவத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது, சிறிலங்கா இராணுவத்தினரான முன்னெடுக்கப்படும் சமூகப் பணிகள் தொடர்பான விபரங்களைக் கேட்டறிந்தார்.

ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்கா படையினர் பணியாற்றுவது தொடர்பாக இருக்கும் பிரச்சினைகள் மற்றும் தடைகள் குறித்தும் இதன் போது பேசப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் சிறிலங்கா இராணுவத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான பணியகத்தின் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேராவும் பங்கேற்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!