ரயில் சேவையும் முடங்கும் ஆபத்து!

எ ரிபொருள் இல்லாததன் காரணமாக, ரயில்வே திணைக்கள ஊழியர்கள் தமது பணியிடங்களுக்குச் செல்ல முடியாமையால் ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்த திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன, எதிர்வரும் நாட்களில் மேலும் பல ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படலாம் என்று தெரிவித்தார்.
    
நேற்றும் பல ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் நாடு முகங்கொடுத்துள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு எதிர்வரும நாட்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என்றார்.

கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறைக்கு புறப்படவிருந்த ரயில்கள் இரத்து செய்யப்பட்டதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்தது.

ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கனிஷ்ட ஊழியர்கள், எரிபொருள் இன்மையால் கடமைக்கு சமுகமளிக்கமுடியாமையே இதற்கான காரணம் என்று சங்கம் சுட்டிக்காட்டியது.
கோட்டையில் இருந்து நேற்றுக் காலை 6.35 மணிக்கு மட்டக்களப்புக்கு புறப்பட வேண்டிய உதயதேவி கடுகதி ரயிலும், 6.05 மணிக்கு காங்கேசன்துறைக்கு புறப்பட வேண்டிய யாழ்தேவி ரயிலும் இரத்து செய்யப்பட்டதாக சங்கம் குறிப்பிட்டது.

கொழும்பு கோட்டை உட்பட நாடளாவிய ரீதியிலுள்ள பல ரயில் நிலையங்களில் மக்கள் வெள்ளம் அலை மோதியதுடன், பலர் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!