கொடுங்கோல் அரசை தூக்கியெறிய வேண்டும்!

நாடு இன்று முற்றிலும் செயலிழந்து போய்விட்டதாகவும், இந்த கொடுங்கோல் அரசாங்கத்தை உடனடியாக தூக்கி எறிந்து, மக்கள் சார் அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டியது இன்றியமையாதது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
   
மக்களின் பணத்தை கொள்ளையடித்த வண்ணம் மேற்கொள்ளப்பட்ட அழிவை நிறுத்த வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட அனைத்துப் பணத்தையும் நாட்டிற்கு கையகப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

“கோட்டா ரணிலின் சாபத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியது.

நாட்டை அராஜகத்தில் ஆழ்த்திய கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஏராளமான அரசியல் தலைவர்கள், சிவில் மற்றும் தொழிற்சங்க ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த அரசாங்கம் முழு நாட்டு மக்களையும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட அனைத்தையும் அழித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய மக்கள் ஆணையின் மூலம் தூய்மையான ஆட்சியொன்றைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது அழைப்பு விடுத்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!